அடுத்த வாரம் விஜய் கரூர் பயணம்; பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி வழங்க திட்டம்
கோர்ட்டு அனுமதி பெற்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூற விஜய் அடுத்த வாரம் கரூர் செல்ல திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நிதியுதவியும் அவர் வழங்க உள்ளார்.;
சென்னை,
த.வெ.க. தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27-ந் தேதி கரூரில் பிரசாரம் மேற்கொண்டார். அந்த நேரத்தில், திடீர் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக த.வெ.க. கரூர் மாவட்ட செயலாளர் கைது செய்யப்பட்டார். பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், நிர்வாகி நிர்மல் குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவு ஒன்று தொடர்பாக ஆதவ் அர்ஜூனா மீதும் வழக்கு பாய்ந்தது. இந்தநிலையில், முன்ஜாமீன் கோரி புஸ்சி ஆனந்த், நிர்மல்குமார் தாக்கல் செய்த மனுவை ஐகோர்ட்டு நிராகரித்தது.
விபத்து நடந்து ஒரு வாரத்திற்கு மேல் ஆகியும் கரூரில் சோகவடு இன்னும் நீங்கவில்லை. அரசியல் கட்சி தலைவர்கள் கரூர் சென்று மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில், தலா ரூ.10 லட்சம் அறிவிக்கப்பட்டது. த.வெ.க. சார்பில் ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.சமீபத்தில், த.வெ.க. தலைவர் விஜய் சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், கரூர் மக்களை சந்தித்து ஆறுதல் கூற கண்டிப்பாக நான் கரூர் வருவேன் என்று தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து அவர் எப்போது கரூர் செல்வார்? என்ற கேள்வி எழுந்தது. பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காமல் சென்றது ஏன்? என்று கோர்ட்டும் கேள்வி எழுப்பியிருந்ததது.
இந்தநிலையில், பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறவும், ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கவும் விஜய் அடுத்த வாரத்தில் கரூர் செல்ல இருக்கிறார். இதற்காக முறையாக கோர்ட்டில் மனு செய்து, அனுமதி கேட்கப்பட உள்ளது. கோர்ட்டு அனுமதிக்கும் பட்சத்தில் விஜய் அடுத்த வாரத்தில் கரூர் செல்வார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போது அதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.