விஜய்யின் மக்கள் சந்திப்பு பிரசார பயணம் தொடரும்: சி.டி.ஆர். நிர்மல் குமார்

தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது.;

Update:2025-10-29 15:54 IST

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தலை சந்திக்கும் வகையில், மக்கள் சந்திப்பை முன்னெடுத்து வந்த தவெகவுக்கு கரூர் நிகழ்வு தீரா வலியை ஏற்படுத்தி விட்டது. அந்த சோக நிகழ்வில் இருந்து கொஞ்சம், கொஞ்சமாக தவெக மீண்டு வருகிறது. கட்சிப்பணிகளை தொடங்க மாவட்ட செயலாளர்களுக்கு விஜய் உத்தரவிட்டு இருக்கிறார். மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கட்சி பணியாற்ற வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

அதன்படி, சென்னை பனையூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், நிர்வாகக் குழு உறுப்பினர்கள், கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தவெக தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்வுகளை மீண்டும் தொடங்குவது, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், தேர்தல் சின்னம் தொடர்பான ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கூட்டத்திற்கு பின்பு அக்கட்சியின் இணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

கரூர் சம்பவம் நடந்த முதல் நாளே பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதற்காக காத்திருந்தோம். ஆனால் ஊருக்குள் செல்ல எங்களுக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை. தவெக கொடி கட்டிய வாகனம் அனுமதிக்கப்படவில்லை. தவெக நிர்வாகிகள் தாக்கப்பட்டனர்; வெளியேற்றப்பட்டனர்.

கட்டுப்பாடு அற்ற கூட்டம் என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியது, காவல்துறையால் கட்டுப்படுத்த முடியாத கூட்டம் என ஒப்புக்கொள்கிறாரா?. விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் தாமதம் ஏன் என்பது அனைவருக்கும் தெரியும். கரூரில் காவல்துறை குறித்து விஜய் பாராட்டியது, மற்ற இடங்களை விட மற்ற தொகுதிகளுக்கு நாங்கள் செல்லும்போது எங்களை அழைத்துச் செல்லாத காவல்துறை இந்த இடத்தில் மட்டும் வேகமாக அழைத்துச் சென்றதுக்கு மட்டுமே. அது எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.

இன்றைய கூட்டத்தில் கட்சிப் பணிகள், தேர்தல் பணிகள் குறித்து ஆலோசித்தோம். பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்துள்ளோம். அது குறித்து எங்கள் தலைவர் முடிவெடுத்து அறிவிப்பார். விஜய்யின் மக்கள் சந்திப்பு பிரசார பயணம் தொடரும். அனுமதிக்காக காத்திருக்கிறோம். எவ்வளவு பெரிய நெருக்கடி வந்தாலும் எதிர்கொள்வோம். விஜய்யின் ஆறுதல் சந்திப்பு தனிப்பட்டது. அரசியலாக்க விரும்பவில்லை. தவெகவின் கூட்டணி நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு மாதத்திற்கு முன்பு இருந்த நிலைப்பாட்டில் தான் இப்போதும் இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்