விஜய் பேச்சு; அ.தி.மு.க.வும், த.வெ.க.வும் மறைமுக கூட்டணியில் இருப்பது அம்பலமாகிறது - வன்னி அரசு
சாதி ஆணவப்படுகொலைகள் குறித்து விஜய் பேசாதது ஏன்? என வன்னி அரசு கேள்வி எழுப்பியுள்ளார்.;
சென்னை,
த.வெ.க. மாநாட்டில் எடப்பாடி பழனிச்சாமி முன்மொழிந்ததை வழிமொழிந்ததன் மூலம் அ.தி.மு.க.வும், த.வெ.க.வும் தான் மறைமுக கூட்டணியாக இருப்பது அம்பலமாகிறது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு விமர்சித்துள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-
“த.வெ.க. இரண்டாவது மாநாடு வெற்றிகரமாக முடிந்ததாக அறிவித்து விட்டார்கள். முதல் மாநாட்டை விட கூடுதல் நேரம் எடுத்து பேசியுள்ளார் விஜய். இந்த மாநாட்டிலும் கொள்கை எதிரி பா.ஜ.க. என்றும் அரசியல் எதிரி தி.மு.க. என்றும் மீண்டும் மீண்டும் தெளிவுபடுத்தி விட்டார்.
கொள்கை எதிரி பா.ஜ.க. குறித்து விஜய் பேசும்போது, பொத்தாம் பொதுவாக பேசுகிறாரே தவிர, குறிப்பாக பேசவில்லை. தற்போது கொண்டுவந்துள்ள ஜனநாயக விரோத மசோதாவான, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்-அமைச்சரை கவர்னர் நீக்குவதற்கு அதிகாரம் குறித்து வாயே திறக்கவில்லை.
பொய் வழக்கு போட்டு 30 நாட்கள் சிறைப்படுத்தி ஜனநாயகத்தை அச்சுறுத்தும் அம்மசோதா குறித்து விஜய் வாய் திறக்காதது ஏன்? தேர்தல் ஆணையத்தின் வழி வாக்குகளை திருடும் ஆபத்து குறித்து பேசாமல் போனது ஏன்? பேசிய அரை மணிநேத்துக்கும் மேலான உரையில், சாதி ஆணவப்படுகொலைகளை தடுத்து நிறுத்த தனிச்சட்டம் வேண்டுமா? வேண்டாமா? என்பது குறித்து பேசாதது ஏனோ?
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட தங்கை ஸ்னோலின் குறித்து பேசிய விஜய், மறந்தும் கூட, துப்பாக்கி சூடு நடத்தி படுகொலை செய்த அ.தி.மு.க. குறித்து வாய் திறக்காதது ஏனோ? தி.மு.க.வுக்கும், பா.ஜ.க.வுக்கும் மறைமுக கூட்டணி என குற்றச்சாட்டு சொல்லும் விஜய், அதற்கான ஆதாரத்தை வெளியிடாமல், எடப்பாடி பழனிச்சாமி முன்மொழிந்ததை வழிமொழிந்ததன் மூலம் அ.தி.மு.க.வும், த.வெ.க.வும் தான் மறைமுக கூட்டணியாக இருப்பது அம்பலமாகிறது.
அந்த கூட்டணியில் பா.ஜ.க.வும் இருப்பதால், அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியின் மறைமுக கூட்டணி பார்ட்னராகவே விஜய் செயல்படுகிறார் என்பது தான் இந்த மாநாட்டு செய்தி. மற்றபடி இந்த மாநாடு விஜய்யின் நீளமான வசனங்கள் நிறைந்த மாநாடு அவ்வளவுதான்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.