ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்தது.. பரிசல் இயக்க, குளிக்க தடை நீடிப்பு

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 28 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. அப்படி இருந்தும் பரிசல் இயக்க, குளிக்க தடை நீடித்தது.;

Update:2025-10-27 03:31 IST

பென்னாகரம், 

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழக மற்றும் கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் விட்டு,விட்டு கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் காணப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 43 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இந்த நீரின் அளவு படிப்படியாக குறைந்து, நேற்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 32 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. இந்த நீர்வரத்து மேலும் குறைந்து மதியம் 2 மணி அளவில் வினாடிக்கு 28 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

இருப்பினும் ஒகேனக்கல்லில் உள்ள மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. மேலும் நடைபாதைக்கு மேலே தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்க விதிக்கப்பட்டு இருந்த தடையானது தொடர்ந்து 6-வது நாளாக நீடித்தது. பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடை நேற்று 5-வது நாளாக நீடித்தது. இதன் காரணமாக ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான நேற்று ஒகேனக்கல் வந்த சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றுத்துடன் திரும்பி சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்