செங்கோட்டையன் விவகாரத்தில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியது என்ன?
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நிர்ணயித்த 200 தொகுதிகளில் வெற்றி என்ற இலக்கை நாம் அடைவது உறுதி செய்யப்பட வேண்டும் என்று பேசியுள்ளார்.;
சென்னை,
அ.தி.மு.க.வின் மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையனுக்கும், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் கடந்த சில மாதங்களாக பனிப்போர் நிகழ்ந்து வருகிறது. இதற்கிடையே கடந்த 1-ந்தேதி ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட செங்கோட்டையன் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து மனம் திறந்து பேச உள்ளேன் என கூறினார்.
அதன்படி நேற்று காலை 10 மணியளவில் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்தவர்களை மீண்டும் சேர்க்கும் பணியை 10 நாட்களுக்குள் தொடங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு ‘கெடு’ விதிக்கிறேன் என கூறினார். அவருடைய இந்த அதிரடி அறிவிப்பு அ.தி.மு.க. வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
செங்கோட்டையன் கெடு விதித்த நிலையில் எடப்பாடி பழனிசாமி முக்கிய நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். இந்நிலையில், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று மாலை கட்சி தொண்டர்கள் முன் உரையாற்றினார். அப்போது, அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி மற்றும் அக்கட்சியின் மூத்த தலைவரான கே.ஏ. செங்கோட்டையன் இடையேயான சமீபத்திய மோதல் போக்கை பற்றி குறிப்பிட்டு பேசினார்.
அவர் பேசும்போது, அ.தி.மு.க.வில் இது ஒரு புதிதாக தோன்றிய அணி. கட்சியின் இரு அணிகளின் உறுப்பினர்கள் சந்தித்து கொள்ளும்போது, அவர்கள் ஒருவரையொருவர் நீங்கள் எந்த அணியில் இருக்கிறீர்கள்? எடப்பாடி பழனிசாமி அணியா, ஓ.பன்னீர்செல்வம் அணியா, டி.டி.வி. தினரன் அணியா, சசிகலா அணியா, செல்லூர் ராஜு அணியா அல்லது புதிதாக உருவெடுத்துள்ள செங்கோட்டையன் அணியா? என கேட்டு கொள்வார்கள் என நகைச்சுவையாக கூறினார்.
அ.தி.மு.க. பல அணிகளாக பிரிந்து கொண்டிருக்கும் நிலையில், தி.மு.க. அதன் கூட்டணி கட்சிகளை விழுங்கி கொண்டிருக்கிறது என எடப்பாடி பழனிசாமி ஊர் ஊராக பேசி வருகிறார். அவர் தி.மு.க.வை விமர்சிப்பதற்கு பதிலாக, அவருடைய கட்சியில் உள்ள சிக்கலை முதலில் தீர்க்க வேண்டும் என்றும் பேசியுள்ளார்.
அ.தி.மு.க.-பா.ஜ.க. என இரு கட்சிகளும் ஒரே பக்கத்தில் நிற்கின்றன. சுய அழிவை ஏற்படுத்தி கொள்வதிலும், ஒன்றையொன்று விழுங்கி கொள்வதிலும் என்றும் கூறினார். சட்டசபை தேர்தலை மனதில் கொண்டு அல்ல. கொள்கைகள் அடிப்படையில் உருவான எங்களுடைய கூட்டணியை பற்றி பேச பழனிசாமிக்கு எந்த உரிமையும் கிடையாது.
அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி தமிழகத்தில் ஆட்சியதிகாரத்திற்கு வந்து விட்டடால், மும்மொழி கொள்கை வழியே இந்தியை திணிக்க வழி வகுத்து விடும். தொகுதி மறுவரையறை செய்து, தேசிய கல்வி கொள்கையை அறிமுகப்படுத்தி, மாநிலத்தின் நிதி உரிமைகள் பறிபோய் விடும் நிலை ஏற்படும் என்றும் அவர் எச்சரித்து உள்ளார்.
அதனால், அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியை இணைந்து வீழ்த்தும் போரில், 2026 சட்டசபை தேர்தலில் முன்கள வீரர்களாக முன்னணியில் நிற்க வேண்டும் என உங்கள் அனைவரையும் வலியுறுத்துகிறேன். நம்முடைய தலைவர் மற்றும் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நிர்ணயித்த 200 தொகுதிகளில் வெற்றி என்ற இலக்கை நாம் அடைவது உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் பேசியுள்ளார்.
2-வது முறையாக ஸ்டாலின் முதல்-அமைச்சராக வருவதற்கான கள பணியாற்றிட கட்சிக்கு அடுத்த 6 மாதங்கள் மிக முக்கியம் என்றும் அவர் பேசியுள்ளார்.