விஜய் பிரசாரத்தின்போது அடிக்கடி ஆம்புலன்ஸ் வந்தது ஏன்? - அரசு தரப்பு விளக்கம்
நெரிசல் காரணமாக மயங்கியவர்களுக்கு சிகிச்சை அளிக்க கூட்டத்துக்கு ஆம்புலன்ஸ் சென்றதாக அதிகாரிகள் விளக்கமளித்தனர்.;
சென்னை,
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தமிழக அரசு அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். அதில் குறிப்பாக, விஜய் பிரசாரத்தின்போது அடிக்கடி ஆம்புலன்ஸ் வந்ததற்கான காரணம் குறித்து அரசு அதிகாரிகள் கூறியதாவது;
”கரூரில் 108 ஆம்புலன்ஸ் சேவைகள் 19 வாகனங்கள் உள்ளன. கூட்டம் நடந்த இடத்தில் 6 வாகனங்கள் இருந்தன. நெரிசல் காரணமாக மயங்கியவர்களுக்கு சிகிச்சை அளிக்கக்கோரி முதலில் மாலை 7.14 மணிக்கு 108 ஆம்புலன்சுக்கு அழைப்பு வந்தது. 7.20க்கு முதல் முறையாக கூட்டத்துக்குள் ஆம்புலன்ஸ் சென்றது. அடுத்த அழைப்பு 7.15 மணிக்கு வந்த நிலையில் 7.23 க்கு ஆம்புலன்ஸ் சென்றது.
கட்சியினரின் ஆம்புலன்ஸ்கள் தயாராக இருந்ததால், அது உடனே கொண்டு வரப்பட்டது. இரவு 7.45 முதல் 9.45 வரை அடுத்தடுத்து ஆம்புலன்ஸ்கள் மூலம் மக்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். 33 தனியார் ஆம்புலன்ஸ்கள் காவல்துறை கேட்டதன் பேரில் வந்தடைந்தன. சம்பவத்தை தொடர்ந்து அண்டை மாவட்டங்களில் இருந்து ஆம்புலன்ஸ் வரவழைப்பு. கூட்ட நெரிசலுக்கு பின்னே ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டது."
இவ்வாறு அவர்கள் கூறினர்.