முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தலைசுற்றல் ஏன்? - மருத்துவமனை விளக்கம்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நலமாக உள்ளார் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.;

Update:2025-07-24 13:39 IST

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல் நலக்குறைவு காரணமாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவமனையில் இருக்கும் நிலையிலும், மக்கள் நலத்திட்டங்கள் தொடர்பாக அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

இருப்பினும் 4-வது நாளாக இன்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர் சிகிச்சையில் உள்ளார். இன்னும் 2 அல்லது 3 நாட்களில் வீடு திரும்புவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், அப்பல்லோமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை அமைச்சர் துரைமுருகன் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் துரைமுருகன் கூறுகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பரிசோதனையில் எந்தவொரு சிறிய அடைப்பும் இல்லை. ஆஞ்சியோ பரிசோதனைக்குப் பிறகு முதல்-அமைச்சர் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார். ஒரு பிரச்சினையும் இல்லை. முதல்-அமைச்சர் எப்போது டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்பதை மருத்துவர்களே சொல்வார்கள் என்று கூறினார்.

இந்த நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஏற்பட்ட தலைசுற்றல் பிரச்சினை தொடர்பாக கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளில் இதயத்துடிப்பில் உள்ள சில வேறுபாடுகள் காரணமாகவே இந்த தலைசுற்றல் ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டது. இதய சிகிச்சை மருத்துவர் டாக்டர் ஜி.செங்குட்டுவேலு அவர்களின் தலைமையிலான மருத்துவ வல்லுநர் குழுவின் அறிவுரையின்படி, இதனை சரி செய்வதற்கான சிகிச்சைமுறை அப்போலோ மருத்துவமனையில் இன்று காலை செய்யப்பட்டது. இன்று மேற்கொள்ளப்பட்ட ஆஞ்சியோகிராம் சோதனையும் இயல்பாக இருந்தது. முதல்-அமைச்சர் நலமாக உள்ளார். தனது வழக்கமான பணிகளை இரண்டு நாட்களில் மேற்கொள்வார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்