மின்சார பஸ்களில் ரூ.1,000- பயண அட்டை செல்லுமா? போக்குவரத்து கழகம் விளக்கம்
சிங்கார சென்னை பயண அட்டை, ரூ.1,000 பயண அட்டையை பயன்படுத்தி மின்சார பஸ்களில் பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.;
சென்னை,
தமிழகத்தில் முதல்முறையாக சென்னை மாநகர் போக்குவரத்து கழகம் சார்பில் ரூ.208 கோடி மதிப்பில் 120 புதிய தாழ்தள மின்சார பஸ்களின் சேவையை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் தொடங்கி வைத்தார். பஸ்களை மின்னேற்றம் செய்வதற்கான கட்டுமான பணிகள், பராமரிப்பு கூடம் உள்ளிட்ட வசதிகளுடன் ரூ.47.50 கோடியில் மேம்படுத்தப்பட்ட வியாசர்பாடி மின்சார பஸ் பணிமனையையும் திறந்து வைத்தார்.
ஒவ்வொரு மின்சார பஸ்சிலும் முன்புறத்தில் 2, பின்புறம் ஒரு கேமரா பொருத்தப்பட்டு, மகளிருக்கு பாதுகாப்பான பயணம் உறுதி செய்யப்படுகிறது. தற்போது மக்கள் பயன்பாட்டுக்காக தொடங்கி வைக்கப்பட்டுள்ள பேருந்துகள், ஏசி வசதி இல்லாதவை. ஒருமுறை சார்ஜ் செய்தால் 200 கி.மீ. வரை இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பஸ்களில் தற்போது டீலக்ஸ் பேருந்துகளில் என்ன கட்டணம் வசூலிக்கப்படுகிறதோ அந்தக்கட்டணமே வசூலிக்கப்படுகிறது. எனவே,விடியல் பயணத்திட்டத்தின் கீழ பயணிக்க அனுமதி இல்லை. அதாவது, மகளிருக்கு இந்த பஸ்சில் இலவச பயணம் கிடையாது. அதே நேரத்தில் மாதாந்திர ரூ.1,000- பாஸ் வைத்து இருக்கும் பயணிகள் இந்த பஸ்சில் பயணிக்க அனுமதிக்கப்படுவார்களா? என்ற கேள்வி எழுந்த நிலையில், ஆயிரம் ரூபாய் பாஸ் வைத்து இருக்கும் பயணிகள் இந்த பஸ்சில் பயணிக்கலாம் என்று சென்னை மாநகர பேருந்து போக்குவரத்து கழக அதிகாரிகள் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது. அதேபோல, சிங்கார சென்னை கார்டு வைத்து இருக்கும் பயணிகளும் இந்த பஸ்சில் பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.