ஐ.ஏ.எஸ். படிக்க உதவக்கோரி கல்லூரி பேராசிரியரிடம் ரூ.80 லட்சம் மோசடி - இளம்பெண் கைது

ஐ.ஏ.எஸ். அகாடமிக்கு சென்று விசாரித்தபோது குணாதேவி அங்கு பயிற்சி பெறவில்லை என்பது தெரியவந்தது.;

Update:2025-10-01 08:22 IST

வேலூர்,

சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியை சேர்ந்தவர் குணாதேவி (வயது 24). இவர் வேலூரில் உள்ள தனியார் கலைக்கல்லூரியில் கடந்த 2018-21-ம் ஆண்டில் இளங்கலை ஆங்கிலம் படித்தார். அப்போது அந்த துறைத்தலைவரும், பேராசிரியருமான ரூபேஷ் சதீஷ்குமாரிடம், குணாதேவி கல்லூரி படிப்புக்கு பின்னர் இந்திய ஆட்சி பணிக்கு (ஐ.ஏ.எஸ்.) படிக்க உள்ளதாகவும், அதற்கு போதிய வசதி இல்லாததால் நிதியுதவி செய்யும்படியும் கேட்டுள்ளார். அவருக்கு உதவ நினைத்த பேராசிரியர் ரூபேஷ்சதீஷ்குமார் முதற்கட்டமாக ரூ.35 ஆயிரம் கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் கடந்தாண்டு குணாதேவி செல்போனில் ரூபேஷ் சதீஷ்குமாரை மீண்டும் தொடர்பு கொண்டு தான் உத்தரகாண்ட் மாநிலம் முசோரியில் உள்ள தனியார் ஐ.ஏ.எஸ். அகாடமியில் தங்கி பயிற்சி பெற்று வருவதாகவும், தந்தை இறந்துவிட்டதால் பொருளாதார ரீதியாக மிகவும் கஷ்டப்பட்டு வருவதாகவும் கூறி உள்ளார். மேலும் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மருத்துவ சிகிச்சைக்காக பல லட்சம் தேவைப்படுவதாகவும், அதற்கு பணஉதவி செய்யும்படி கேட்டுள்ளார்.

அதனை உண்மை என்று நம்பிய பேராசிரியர் ரூபேஷ்சதீஷ் குமார் உடனடியாக ரூ.16 லட்சத்தை அந்த பெண்ணின் வங்கிக்கணக்கிற்கு அனுப்பினார். அதன்பின்னர் அவர் வாட்ஸ்-அப் குரூப் ஒன்றை உருவாக்கி தனது நண்பர்கள், குடும்பத்தினர், பேராசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் உள்பட பலரை அதில் இணைத்து மாணவியின் மருத்துவ சிகிச்சை மற்றும் படிப்பிற்கு உதவும்படி அதில் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதன்பேரில் ஏராளமானோர் அவருடைய வங்கிக்கணக்கிற்கு பணம் அனுப்பியுள்ளனர். மொத்தமாக அந்த பெண்ணுக்கு பேராசிரியர் சுமார் 70 லட்சம் ரூபாய் பண உதவி செய்துள்ளார். இந்த நிலையில் குணாதேவி கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஐ.ஏ.எஸ். பயிற்சி முடிந்துவிட்டதாக கூறி அவரின் ஐ.டி. கார்டை பேராசிரியரின் செல்போனுக்கு அனுப்பி உள்ளார். அதைக்கண்ட அவருக்கு திடீரென சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து முசோரியில் உள்ள அந்த ஐ.ஏ.எஸ். அகாடமிக்கு சென்று அவரை பற்றி பேராசிரியர் விசாரித்தார். அப்போது குணாதேவி அங்கு பயிற்சி பெறவில்லை என்று தெரிய வந்தது. இதையடுத்து அவர், பல நபர்களிடம் குணாதேவி குறித்து விசாரித்தபோது தான் ஐ.ஏ.எஸ். படிப்பதற்காக மற்றும் மருத்துவச்செலவிற்காக என்று கூறி பேராசிரியர் உள்பட பலரிடம் ரூ.80 லட்சம் பெற்று மோசடி செய்தது தெரிய வந்தது. இதுகுறித்து ரூபேஷ் சதீஷ்குமார் செல்போனில் அந்த பெண்ணை தொடர்பு கொண்டு கேட்டதற்கு அலட்சியமாக பதில் கூறி உள்ளார். மேலும் அந்த பணத்தை சில மாதங்களில் கொடுத்து விடுவதாக மிரட்டும் தொனியில் பேசி உள்ளார்.

அதனால் அதிர்ச்சி அடைந்த ரூபேஷ் சதீஷ்குமார் இதுதொடர்பாக வேலூர் மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் குணாதேவி ஐ.ஏ.எஸ். படிப்பதற்காக மற்றும் மருத்துவச்செலவிற்காக என்று கூறி ஏமாற்றி ரூ.80 லட்சம் மோசடி செய்தது உறுதியானது. அதையடுத்து அவரை நேற்று போலீசார் கைது செய்தனர். அவர் இதுபோன்று வேறு யாரிடமும் பணம் பெற்று ஏமாற்றி உள்ளாரா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்