எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..? வெளியான தகவல்
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தின் குறிப்பிட்ட மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது.;
கோப்புப்படம்
சென்னை,
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு அரபிக் கடல் பகுதிகளில் நிலவிய ‘சக்தி' புயல் தெற்கு திசையில் நகர்ந்து நேற்று காலை 5.30 மணியளவில் வலுகுறைந்த புயலாக அதே பகுதியில் நிலவியது. இது குஜராத் மாநிலம் துவாரகாவில் இருந்து மேற்கு-தென் மேற்கில் 940 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது. இது மேலும் கிழக்கு-தென்கிழக்கே மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நகர்ந்து இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுகுறையும்.
இதேபோல, மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது.
நாளை (புதன்கிழமை) கோவை மாவட்ட மலை பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
9-ந் தேதி கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களிலும், 10-ந் தேதி நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டையிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது. நேற்று காலை 8.30 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், அதிபட்சமாக திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் 14 சென்டி மீட்டரும், கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் 9 சென்டி மீட்டரும் மழை பெய்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.