பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி சீனாவுக்கு திடீர் பயணம்
ஆசிப் அலி சர்தாரி, இன்று முதல் செப்டம்பர் வரும் 21 ஆம் தேதி வரை சீனாவில் சுற்றுப்பயணம் செய்கிறார்;
பெய்ஜிங்,
பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, 10 நாள் அரசு முறைப் பயணமாக சீனாவுக்கு சென்றுள்ளார். இதற்கு முன்பு, பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷரீப் மற்றும் அந்நாட்டு ராணுவத் தளபதி அசிம் முனீர் ஆகியோர், 5 நாள் அரசு பயணமாக சீனாவுக்குச் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அதிபர் ஆசிப் அலி சர்தாரி, இன்று முதல் செப்டம்பர் 21ஆம் தேதி வரை சீனாவில் சுற்றுப்பயணம் செய்கிறார். இந்தப் பயணத்தின் முதல் நாளில், சிச்சுவான் மாகாணத்திலுள்ள செங்டு நகரை அடைந்தார். அங்கு நடைபெறும் கோல்டன் பாண்டா சர்வதேச கலாசார மன்றம் திறப்பு விழாவில் அவர் பங்கேற்க உள்ளார்.
இதனைத் தொடர்ந்து, சிச்சுவான் மாகாணம், ஷாங்காய் மற்றும் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதிகளையும் அவர் பார்வையிட உள்ளார். மேலும், சீனாவின் மூத்த தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுடன் சந்தித்து, சீனா–பாகிஸ்தான் உறவுகள் தொடர்பான முக்கிய விவாதங்களை நடத்துவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக, சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ, ஆகஸ்ட் 20 முதல் 22ஆம் தேதி வரை பாகிஸ்தானுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.