4-வது டெஸ்ட்: 2-வது இன்னிங்சில் சதம் விளாசிய கேப்டன் சுப்மன் கில்
இந்திய அணி இன்னும் 98 ரன்கள் பின்தங்கி உள்ளது.;
மான்செஸ்டர்,
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டுடிராப்போர்டில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 358 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 61 ரன்கள் அடிக்க, இங்கிலாந்து தரப்பில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 157.1 ஓவர்களில் 669 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜோ ரூட் (150 ரன்), கேப்டன் பென் ஸ்டோக்ஸ் (141 ரன்) சதமடித்து அசத்தினர். இந்திய தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர், பும்ரா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
அடுத்து 311 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் 63 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 174 ரன்கள் அடித்திருந்தது. சுப்மன் கில் 78 ரன்களுடனும், கே.எல். ராகுல் 87 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்திய அணி 137 ரன்கள் பின்தங்கி இருந்த நிலையில் 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே கே.எல்.ராகுல் 90 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வாஷிங்டன் சுந்தர் களமிறங்கினார். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய சுப்மன் கில் சதத்தை நோக்கி முன்னேறினார்.
வாஷிங்டன் சுந்தர் - கில் இருவரும் தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தினர். இதனால் ஸ்கோர் ஆமை வேகத்தில் நகர்ந்தது. அபார பேட்டிங்கை வெளிப்படுத்திய சுப்மன் கில் 228 பந்துகளில் சதத்தை நிறைவு செய்தார். இந்த தொடரில் அவர் அடித்த 4-வது சதம் இதுவாகும்.
தற்போது வரை இந்திய அணி 2-வது இன்னிங்சில் 85 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்கள் அடித்துள்ளது. சுப்மன் கில் 101 ரன்களுடனும், வாஷிங்டன் சுந்தர் 13 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி இன்னும் 98 ரன்கள் பின்தங்கி உள்ளது.