ஆசிய கோப்பை: ஸ்ரேயாஸ் ஐயர் தேர்ந்தெடுக்கப்பட்டால் இவருக்கு அணியில் இடம் இருக்காது - அஸ்வின்
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது.;
image courtesy:PTI
மும்பை,
நடப்பு சாம்பியன் இந்தியா உள்பட 8 அணிகள் பங்கேற்கும் 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. அடுத்த வருடம் நடைபெற உள்ள ஐ.சி.சி. டி20 உலகக்கோப்பைக்கு ஆசிய அணிகள் தயாராகும் பொருட்டு இந்த தொடர் இம்முறை டி20 வடிவில் நடத்தப்பட உள்ளது. இந்த தொடரில் பங்கேற்றுள்ள அணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
இதில் ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை செப்.10-ந் தேதி துபாயில் சந்திக்கிறது. இதைத்தொடர்ந்து பரம எதிரியான பாகிஸ்தானை செப்.14-ந் தேதி துபாயிலும், ஓமனை செப்.19-ந் தேதி அபுதாபியிலும் எதிர்கொள்கிறது. இறுதிப்போட்டி செப்.28-ந் தேதி துபாயில் அரங்கேறுகிறது.
இந்த தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. தலைமை பயிற்சியாளர் கம்பீர், தேர்வுக்குழு தலைவர் அகர்கர் மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் கலந்தாலோசித்து அணியை தேர்வு செய்து அறிவிக்க உள்ளனர். இந்த அணியில் யார்-யாரெல்லாம் இடம்பெற போகிறார்கள்? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. பல முன்னாள் வீரர்களும் இந்த தொடருக்கான அணித்தேர்வு குறித்து பலவித கருத்துகளை முன்வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் தேர்ந்தெடுக்கப்பட்டால் ஷிவம் துபேவுக்கு அணியில் இடம் இருக்காது என முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, தொடக்க வீரர்களாக அபிஷேக் - சாம்சன் விளையாடக்கூடும். ஸ்ரேயாஸ் 3வது இடத்தில் விளையாடுவார். சூர்யகுமார் மற்றும் திலக் வர்மா ஆகியோர் சூழ்நிலைக்கு தகுந்தார் போல் 4, 5வது இடங்களில் விளையாடுவார்கள். ஒருவேளை ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் சிவம் துபேவுக்கு அணியில் இருக்காது
ஏனெனில் 3, 4, 5வது இடங்களில் ஸ்ரேயாஸ், சூரியகுமார், திலக் விளையாடுவார்கள். அதனால் 6, 7 இடங்களில் அக்சர் பட்டேல், ஹர்திக் பாண்டியா ஆகியோர் கண்டிப்பாக விளையாடுவார்கள் என்பதில் எந்த விவாதமும் கிடையாது. ஏற்கனவே நாம் சஞ்சு சாம்சனை மேலே விளையாட அனுப்பியுள்ளோம். பேக்-அப் விக்கெட் கீப்பர்களை பொறுத்த வரை துருவ் ஜுரேல், கேஎல் ராகுல் (12, 13வது வீரர்கள்) ஆகியோரும் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது.
என்னைப் பொறுத்த வரை குல்தீப் 8வது இடத்தில் விளையாட வேண்டும். வாஷிங்டன் சுந்தர் 14வது வீரராக அணியில் இடம் பிடிப்பார். வருண் சக்கரவர்த்தி 9வது இடத்தில் விளையாடுவார். டிஎன்பிஎல் தொடரில் அவருடைய ஆட்டத்தை நீங்கள் பார்த்திருப்பீர்கள். தற்போது அவர் தன்னுடைய பேட்டிங்கில் கொஞ்சம் வேலை செய்துள்ளார். 10வது இடத்தில் பும்ரா, 11வது இடத்தில் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் விளையாடுவார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.