ஆசிய கோப்பை: இந்தியா-பாகிஸ்தான் ஆட்டத்தில் வெற்றிபெறப்போவது யார்..? பாக்.முன்னாள் வீரர் கணிப்பு
ஆசிய கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் செப்.14-ம் தேதி நடைபெற உள்ளது.;
கராச்சி,
நடப்பு சாம்பியன் இந்தியா உள்பட 8 அணிகள் பங்கேற்கும் 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. அடுத்த வருடம் நடைபெற உள்ள ஐ.சி.சி. டி20 உலகக்கோப்பைக்கு ஆசிய அணிகள் தயாராகும் பொருட்டு இந்த தொடர் இம்முறை டி20 வடிவில் நடத்தப்பட உள்ளது. இந்த தொடரில் பங்கேற்றுள்ள அணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
அதன்படி 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் அணிகளும், 'பி' பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறும்.
இதில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை செப்.10-ந் தேதி துபாயில் சந்திக்கிறது. இதைத்தொடர்ந்து பரம எதிரியான பாகிஸ்தானை செப்.14-ந் தேதி துபாயிலும், ஓமனை செப்.19-ந் தேதி அபுதாபியிலும் எதிர்கொள்கிறது. இறுதிப்போட்டி செப்.28-ந் தேதி துபாயில் அரங்கேறுகிறது.
இந்தியா - பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோத உள்ளதால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற வாய்ப்புள்ள அணி குறித்து பல முன்னாள் வீரர்கள் தங்களது கணிப்பினை வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வரிசையில் பாகிஸ்தான் முன்னாள் வீரரான வாசிம் அக்ரம் இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாக கணித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், “சமீபத்தில் இந்திய அணி சிறப்பான பார்மில் உள்ளது. அதனால், அவர்களே இந்தப் போட்டியில் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது. இருப்பினும் இந்தியா-பாகிஸ்தான் போட்டியை பொறுத்தவரை அன்றைய நாளில், எந்த அணி அழுத்தத்தைச் சிறப்பாகக் கையாளுகிறதோ, அந்த அணியே வெற்றி பெறும்” என்று கூறினார்.