வம்பிழுத்த பென் டக்கெட்.. திரும்பி வந்து பதிலடி கொடுத்த சாய் சுதர்சன்.. மைதானத்தில் சலசலப்பு

இங்கிலாந்து - இந்தியா 5-வது டெஸ்டில் வீரர்களுக்கு இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன.;

Update:2025-08-02 09:55 IST

லண்டன்,

இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் மழை பாதிப்புக்கு மத்தியில் முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 69.4 ஓவர்களில் 224 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக கருண் நாயர் 57 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் அட்கின்சன் 5 விக்கெட்டும், ஜோஷ் டாங்கு 3 விக்கெட்டும் சாய்த்தனர்.

பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 51.2 ஓவர்களில் 247 ரன்னில் ஆல்-அவுட்டாகி, 23 ரன் முன்னிலை பெற்றது. அதிகபட்சமாக ஜாக் கிராவ்லி 64 ரன்களும், புரூக் 53 ரன்களும் அடித்தனர். இந்திய தரப்பில் முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

அடுத்து 23 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 2-வது நாள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 75 ரன்கள் அடித்துள்ளது. ஜெய்ஸ்வால் 51 ரன்களுடனும், ஆகாஷ் தீப் 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். கே.எல். ராகுல் 7 ரன்களிலும், சாய் சுதர்சன் 11 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இந்தியா தற்போது வரை 52 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இத்தகைய சூழலில் இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.

இந்த போட்டியில் இங்கிலாந்து - இந்தியா வீரர்களுக்கு இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. பென் டக்கெட் விக்கெட்டை கைப்பற்றிய ஆகாஷ் தீப் வித்தியாசமான முறையில் அவரை வழியனுப்பி வைத்தார். அடுத்ததாக ஜோ ரூட் - பிரசித் கிருஷ்ணா இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது. இப்படி ஏகப்பட்ட மோதல்கள் ஏற்பட்டு வருகின்றனர்.

அந்த வரிசையில் சாய் சுதர்சன் - பென் டக்கெட் இடையே ஏற்பட்ட காரசாரமான வாக்குவாதம் தற்போது பேசு பொருளாகி உள்ளது. இந்திய அணியின் 2வது இன்னிங்சில் சாய் சுதர்சன் 11 ரன்களில் கஸ் அட்கின்சன் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். ரிவியூ எடுத்தும் பலனில்லாமல் போனது.

இந்நிலையில் சாய் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பியபோது பென் டக்கெட் அவரை நோக்கி ஏதோ கூறி வம்பிழுத்துள்ளார். இதனால் கடுப்படைந்த சாய் சுதர்சன் திரும்பி வந்து பென் டக்கெட் உடன் வார்த்தை மோதலில் ஈடுபட்டார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட காரசாரமான வாக்குவாதம் மைதானத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. ஹாரி புரூக் மற்றும் இங்கிலாந்து கேப்டன் ஆலி போப் இணைந்து சாய் சுதர்சனை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்