சாய் சுதர்சன் டக் அவுட் ஆக கம்பீர், சுப்மன் கில்தான் காரணம் - ஆஸி.முன்னாள் கேப்டன் குற்றச்சாட்டு

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்டின் 2-வது இன்னிங்சில் சாய் சுதர்சன் கோல்டன் டக் அவுட் ஆனார்.;

Update:2025-07-27 17:15 IST

மான்செஸ்டர்,

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டுடிராப்போர்டில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 358 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 61 ரன்கள் அடிக்க, இங்கிலாந்து தரப்பில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 157.1 ஓவர்களில் 669 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜோ ரூட்  (150 ரன்), கேப்டன் பென் ஸ்டோக்ஸ் (141 ரன்) சதமடித்து அசத்தினர். இந்திய தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர், பும்ரா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

அடுத்து 311 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணிக்கு முதல் ஓவரிலேயே பேரிடி விழுந்தது. இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் வீசிய முதல் ஓவரின் 4-வது பந்தில் ஜெய்ஸ்வால் (0) ஸ்லிப்பில் நின்ற ஜோ ரூட்டிடம் கேட்ச் ஆனார். அடுத்து இறங்கிய தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்சன் (0) சந்தித்த முதல் பந்திலேயே இதே போல் விக்கெட்டை தாரைவார்த்தார். ரன் கணக்கை தொடங்கும் முன்பே இரு விக்கெட்டுகள் காலியானதால் இந்தியா அதிர்ச்சிக்குள்ளானது.

இந்த நெருக்கடியான சூழலில் 3-வது விக்கெட்டுக்கு கே.எல்.ராகுலும், கேப்டன் சுப்மன் கில்லும் இணைந்தனர். பொறுமையை கடைபிடித்த இவர்கள் முழுமையாக தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தினர். 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2-வது இன்னிங்சில் 63 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 174 ரன்கள் எடுத்துள்ளது. சுப்மன் கில் 78 ரன்களுடனும், கே.எல். ராகுல் 87 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இன்னிங்ஸ் தோல்வியே தவிர்க்கவே இந்திய அணி இன்னும் 137 ரன்கள் அடிக்க வேண்டும். இந்த பரபரப்பான சூழலில் கடைசி நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது.

முன்னதாக இத்தொடரின் முதல் போட்டியில் அறிமுகமான சாய் சுதர்சன் அந்த ஆட்டத்தில் 0, 30 ரன்கள் அடித்தார். ஆனால் அடுத்த போட்டியிலேயே கருண் நாயருக்காக அவரை நீக்கிய இந்திய அணி நிர்வாகம் இப்போட்டியில் வாய்ப்பு கொடுத்தது. இந்த வாய்ப்பில் முதல் இன்னிங்சில் 61 ரன்கள் அடித்த அவர் 2-வது இன்னிங்சில் கோல்டன் டக் ஆனார்.

இந்நிலையில் 2வது இன்னிங்சில் சாய் சுதர்சன் கோல்டன் டக் அவுட்டாக பயிற்சியாளர் கவுதம் கம்பீர், கேப்டன் கில் தான் காரணம் என்று ஆஸ்திரேலிய முன்னாள் ரிக்கி பாண்டிங் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "இது உள்ளார்ந்த அழுத்தத்தை உருவாக்கும். அதாவது நமக்கு இன்னுமொரு வாய்ப்பு கிடைக்குமா? என்ற அழுத்தத்தை நீங்கள் இளம் வீரரின் தோளில் சுமத்தக்கூடாது. அதனாலேயே முதல் போட்டியில் சாய் சுதர்சனை அறிமுகமாக்கிய இந்திய அணி பின்னர் கழற்றி விட்டு தற்போது மீண்டும் ஆதரவளிப்பது எனக்கு ஆச்சரியமளிக்கிறது.

கேப்டன் (சுப்மன் கில்) மற்றும் பயிற்சியாளராக (கம்பீர்) நீங்கள் ஒரு இளம் வீரருக்கு உறுதியான வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும். உன்னைத் தேர்ந்தெடுத்துள்ள நாங்கள் கணிசமான வாய்ப்பைக் கொடுத்து, எப்படி விளையாடப் போகிறீர்கள் என்பதைப் பார்ப்போம் என்று சொல்ல வேண்டும். சுதர்சன் போதுமானளவு சிறப்பாக செயல்படுவார் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை" என்று கூறினார்.


Tags:    

மேலும் செய்திகள்