சூர்யகுமார் யாதவை விலங்குடன் ஒப்பிட்டு விமர்சித்த விவகாரம்: விளக்கமளித்த பாக்.முன்னாள் வீரர்

ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் வீரர்களுடன் இந்திய வீரர்கள் கை குலுக்க மறுத்த சம்பவம் சர்ச்சையானது.;

Update:2025-09-18 10:25 IST

லாகூர்,

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நடைபெற்ற 6-வது லீக் ஆட்டத்தில் பரம எதிரிகளான இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. முன்னதாக பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் கொடூர தாக்குதல், அதற்கு இந்தியாவின் பதிலடியால் உருவான போர் பதற்றம் தணிந்த பிறகு இவ்விரு அணிகளும் சந்தித்த முதல் போட்டி என்பதால் கிரிக்கெட் உலகின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்து இருந்தது.

போட்டி முடிந்ததும் இரு அணி வீரர்களும் கைகுலுக்குவது வழக்கம். ஆனால் இந்த ஆட்டம் முடிந்ததும், இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கை குலுக்குவதை தவிர்த்துவிட்டனர். பாகிஸ்தான் வீரர்கள் கை குலுக்குவதற்காக களத்தில் இருந்த நிலையில் இந்திய வீரர்கள் வெளியேறினர். இந்த விவகாரம் சர்ச்சையானது.

இதனை பாகிஸ்தானை சேர்ந்த பல முன்னாள் வீரர்கள் விமர்சித்து வருகின்றனர். அதன் உச்சமாக பாகிஸ்தான் முன்னாள் வீரரான முகமது யூசுப் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவை ‘பன்றி’ உடன் ஒப்பிட்டு விமர்சித்தார். அத்துடன் நடுவர்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி போட்டியில் வெல்வதற்காக இந்தியா வெட்கப்பட வேண்டும் எனவும் அவர் விமர்சித்திருந்தார். இதனை பார்த்த இந்திய ரசிகர்கள் அவரை சமூக வலைதளங்களில் வறுத்தெடுத்தனர்.

இந்நிலையில் தம்மை வம்பிழுத்த ஷாகித் அப்ரிடியை ஏன் நாய் போல குறைக்கிறீர்கள்? என்று சொல்லி பதிலடி கொடுத்ததாக இந்திய முன்னாள் வீரர் இர்பான் பதான் சமீபத்தில் தெரிவித்திருந்தார். அப்போது பதானை இந்திய மக்களும் ஊடகங்களும் பாராட்டியதாக முகமது யூசுப் தெரிவித்துள்ளார். எனவே அதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே சூரியகுமாரை பன்றி என்று சொன்னதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “நாட்டிற்காக ஆர்வம் மற்றும் கருணையுடன் விளையாடும் எந்த விளையாட்டு வீரரையும் நான் அவமரியாதை செய்யவில்லை. ஆனால் ஷாகித் அப்ரிடி நாய் போல குரைக்கிறார் என்று இர்பான் பதான் கூறியபோது இந்திய ஊடகங்களும் மக்களும் ஏன் அவரைப் புகழ்ந்தார்கள்? கண்ணியம் மற்றும் மரியாதை பற்றிப் பேசும் அனைவராலும் அது நிராகரிக்கப்பட்டிருக்க வேண்டாமா?” என்று பதிவிட்டுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்