ஐ.பி.எல்.2025: ஆரஞ்சு, ஊதா நிற தொப்பியை கைப்பற்றிய பெங்களூரு அணி வீரர்கள்
அதிக ரன் குவித்த வீரருக்கு ஆரஞ்சு நிற தொப்பி வழங்கப்படுகிறது.;
புதுடெல்லி,
18-வது ஐ.பி.எல். தொடரில், டெல்லியில் நேற்றிரவு நடந்த 46-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் ரஜத் படிதார் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 162 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 41 ரன்கள் அடித்தார். பெங்களூரு தரப்பில் புவனேஸ்வர்குமார் 3 விக்கெட்டுகளும், ஹேசில்வுட் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
அடுத்து 163 ரன் இலக்கை நோக்கி ஆடிய பெங்களூரு அணி 18.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக குருனால் பாண்ட்யா 73 ரன்களும், விராட் கோலி 51 ரன்களும் அடித்தனர். டெல்லி தரப்பில் அக்சர் படேல் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இந்த ஆட்டத்தில் அடித்த ரன்கள் மூலம் அதிக ரன் குவித்த வீரருக்கு வழங்கப்படும் ஆரஞ்சு நிற தொப்பியை மும்பை வீரர் சூர்யகுமார் யாதவிடம் இருந்து (427 ரன்), பெங்களூரு நட்சத்திர வீரர் விராட் கோலி தட்டிப்பறித்தார். கோலி இதுவரை 10 ஆட்டங்களில் ஆடி 6 அரைசதம் உள்பட 443 ரன்கள் குவித்துள்ளார்.
இதே போல் அதிக விக்கெட்டுக்குரிய ஊதா நிற தொப்பியை, பிரசித் கிருஷ்னாவிடம் (16 விக்கெட்டுகள்) இருந்து பெங்களூரு வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் (18 விக்கெட்) கைப்பற்றினார்.