நாகாலாந்துக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட்: தமிழக அணி 399 ரன்கள் குவிப்பு

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் நாகாலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் முதல் நாளில் தமிழக அணி 399 ரன்கள் குவித்துள்ளது.;

Update:2025-10-26 08:37 IST

Image Courtesy: @TNCACricket

பெங்களூரு,

91-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ‘எலைட்’ பிரிவில் இடம் பிடித்துள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. இதன் 2-வது லீக் ஆட்டம் நேற்று தொடங்கியது.

இதில் பெங்களூவில் நடைபெறும் ஆட்டம் ஒன்றில் (ஏ பிரிவு) தமிழ்நாடு- நாகாலாந்து அணிகள் மோதுகின்றன. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் ஆடிய தமிழக அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஆதிஷ் 14 ரன்னில் அவுட் ஆனார்.

இதையடுத்து பிரதோஷ் ரஞ்சன் பால், விமல் குமாருடன் இணைந்தார். இருவரும் நிதானமாக ஆடியதுடன் ஏதுவான பந்துகளை எல்லைக்கோட்டுக்கு ஓடவிட்டனர். ஸ்கோர் 337 ரன்னாக உயர்ந்த போது, முதல் தர கிரிக்கெட்டில் முதலாவது சதத்தை அடித்த விமல் குமார் 189 ரன்னில் (224 பந்து, 28 பவுண்டரி) கேட்ச் கொடுத்து வெளியேறினார். 2-வது விக்கெட்டுக்கு இந்த இணை 307 ரன்கள் சேர்த்தது. அடுத்து ஆந்த்ரே சித்தார்த் வந்தார்.

நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் தமிழக அணி முதல் இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 399 ரன்கள் குவித்துள்ளது. பிரதோஷ் ரஞ்சன் பால் 156 ரன்களுடனும் (252 பந்து, 19 பவுண்டரி), ஆந்த்ரே சித்தார்த் 30 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெறும்.

Tags:    

மேலும் செய்திகள்