இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்; இந்திய முன்னணி வீரருக்கு அபராதம்

இந்தியா-இங்கிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் நடந்து வருகிறது.;

Update:2025-07-14 13:45 IST

Image Courtesy: @ICC

லண்டன்,

இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் நடந்து வருகிறது. இதில் முதலில் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 387 ரன்கள் எடுத்தது. ஜோ ரூட் சதமும் (104 ரன்), ஜேமி சுமித் (51 ரன்), பிரைடன் கார்ஸ் (56 ரன்) அரைசதமும் அடித்தனர். இந்தியா தரப்பில் பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியும் 387 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 100 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து அணி தரப்பில் கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டும், ஜோப்ரா ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸ் தலா 2 விக்கெட்டும், பிரைடன் கார்ஸ், சோயிப் பஷீர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதைத்தொடர்ந்து 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் ஒரு ஓவரில் விக்கெட் இழப்பின்றி 2 ரன் அடித்திருந்தது. ஜாக் கிராவ்லி 2 ரன்னுடனும், பென் டக்கெட் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

இத்தகைய சூழலில் 4-வது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து 192 ரன்னில் அவுட் ஆனது. இதையடுத்து இந்தியாவுக்கு 193 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை நோக்கி ஆடிய இந்தியா நேற்றைய 4ம் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டை இழந்து 58 ரன்கள் எடுத்துள்ளது. இன்று 5ம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

இந்நிலையில், இங்கிலாந்தின் 2வது இன்னிங்ஸ் பென் டக்கெட் 12 ரன்களில் சிராஜ் பந்துவீச்சில் பும்ராவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். டக்கெட் விக்கெட் கைப்பற்றியதை சிராஜ் ஆக்ரோஷமாக கத்தி கொண்டாடினார். விக்கெட் வீழ்த்தியவுடன் ஓடிய சிராஜ், டக்கெட்டின் முகத்திற்கு நேராக கத்தி வெறித்தனமாக கொண்டாடினார். டக்கெட் அதிருப்தியுடன் வெளியேறினார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. இந்நிலையில், விக்கெட் வீழ்த்தியதை ஆக்ரோஷமாக கொண்டாடிய சிராஜ்-க்கு ஐ.சி.சி. அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி போட்டி கட்டணத்தில் இருந்து 15 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்