டெஸ்ட் தொடர்: இந்திய அணி இங்கிலாந்துக்கு செல்வது எப்போது..?
இந்தியா - இங்கிலாந்து முதல் டெஸ்ட் போட்டி ஜூன் 20-ம் தேதி தொடங்க உள்ளது.;
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் (ஜூன்) முதல் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதன்படி இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஜூன் 20-ந் தேதி லீட்சில் தொடங்குகிறது. இந்த தொடருக்கான 18 வீரர்கள் கொண்ட இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அகர்கர் தலைமையிலான தேர்வு குழுவினர் அணியை தேர்வு செய்து அறிவித்தனர்.
இந்த மாதம் தொடக்கத்தில் டெஸ்ட் போட்டியில் இருந்து கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெற்றதால் அடுத்த கேப்டன் யார்? என்று அதிக எதிர்பார்ப்பு நிலவியது. இந்த நிலையில் எதிர்பார்த்தபடி சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 4-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (2025-27) சுழற்சியில் இந்தியாவின் முதல் தொடர் இது என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்நிலையில் இந்த தொடரில் பங்கேற்க உள்ள இந்திய அணி ஜூன் 6-ம் தேதி மும்பையிலிருந்து புறப்பட்டு இங்கிலாந்துக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்து தொடருக்கான இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களின் விவரம் பின்வருமாறு;-
சுப்மன் கில்(கேப்டன்), ரிஷப் பண்ட்(துணை கேப்டன்), ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், சாய் சுதர்சன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், நிதிஷ் குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங் மற்றும் குல்தீப் யாதவ்.