மகளிர் கிரிக்கெட் போட்டி: டாஸில் பாகிஸ்தான் கேப்டன் ஏமாற்றினாரா? ரசிகர்கள் கோபம்
இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய இன்றைய ஆட்டத்தில் டாஸ் போடும்போது ஏற்பட்ட குழப்பம் ரசிகர்களை கோபம் அடைய வைத்துள்ளது.;
Photo Credit: AP
கொழும்பு,
2025 மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 30-ம் தேதி முதல் தொடங்கி நவம்பர் 2 வரை நடைபெறுகிறது. இதில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, இந்தியா, வங்கதேசம், தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 8 அணிகள் கோப்பைக்காக மோதுகின்றன.இந்தியா மற்றும் இலங்கையில் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், இந்திய அணி முதல் உலகக் கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இலங்கைக்கு எதிரான முதல் போட்டியில் அசத்தலான வெற்றியைப் பதிவு செய்த இந்திய அணி, தங்களுடைய 2-வது போட்டியில் இன்று பாகிஸ்தானை எதிர்கொண்டு விளையாடி வருகிறது.
இலங்கை கொழும்புவில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் போடுவதில் குழப்பம் ஏற்பட்டது.இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் நாணயத்தைத் தூக்கிப் போட, பாகிஸ்தான் கேப்டன் பாத்திமா ‘டெயில்ஸ்’ என அழைப்பு விடுத்தார். ஆனால், அதைப் போட்டி நடுவர் தவறாக ‘ஹெட்ஸ்’ எனப் புரிந்து கொண்டு, விழுந்தது ’ஹெட்ஸ்’ என்பதால் பாகிஸ்தான் கேப்டன் டாஸ் வென்றதாக அறிவித்தார். இதற்கு, "நான் ஹெட்ஸ் கேட்கவில்லை, டெயில்ஸ் தான் கேட்டேன்" என பாகிஸ்தான் கேப்டன் மறுப்பு தெரிவிக்கவில்லை. இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத்தும் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பந்து வீச்சைத் தேர்வு செய்தார். இந்த விஷயத்தைத் தற்போது சமூக வலைதளங்களில் பகிர்ந்து வரும் இந்திய ரசிகர்கள், பாகிஸ்தான் கேப்டன் ஏமாற்றி விட்டதாகக் கோபத்துடன் பதிவிட்டு வருகின்றனர்.