மகளிர் பிரீமியர் லீக்; உ.பி.வாரியர்ஸை வீழ்த்தி 4வது வெற்றியை பதிவு செய்த மும்பை இந்தியன்ஸ்
5 அணிகள் பங்கேற்றுள்ள 3-வது மகளிர் பிரீமியர் லீக் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.;
Image Courtesy: @wplt20
லக்னோ,
5 அணிகள் பங்கேற்றுள்ள 3-வது மகளிர் பிரீமியர் லீக் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று லக்னோவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் தீப்தி ஷர்மா தலைமையிலான உ.பி. வாரியர்ஸ் அணி, ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்சுடன் மோதியது.
இந்த போட்டிக்கான டாசில் வென்ற மும்பை முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த உ.பி. வாரியர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்தது. உ.பி. வாரியர்ஸ் தரப்பில் அதிகபட்சமாக ஜார்ஜியா வால் 55 ரன் எடுத்தார்.
மும்பை அணியில் அமெலியா கெர் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். தொடர்ந்து 151 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த மும்பை 18.3 ஓவர்களில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 153 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இந்த தொடரில் தனது 4வது வெற்றியை பதிவு செய்தது.
மும்பை தரப்பில் அதிகபட்சமாக ஹேலி மேத்யூஸ் 68 ரன்கள் எடுத்தார். உ.பி.வாரியர்ஸ் தரப்பில் கிரேஸ் ஹாரிஸ் 2 விக்கெட் வீழ்த்தினார். இந்த தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோத உள்ளன. இந்த ஆட்டம் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.