மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: வங்காளதேசத்திற்கு 228 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நியூசிலாந்து
நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக புரூக் ஹாலிடே 69 ரன் எடுத்தார்.;
Image Courtesy: @ICC
கவுகாத்தி,
13-வது மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
இந்நிலையில், மகளிர் உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்று வரும் 11வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து - வங்காளதேசம் அணிகள் ஆடி வருகின்றன. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. தொடர்ந்து நியூசிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக சுசி பேட்ஸ் மற்றும் ஜார்ஜியா பிளிம்பர் களம் கண்டர்னர். இதில் ஜார்ஜியா பிளிம்பர் 4 ரன், சுசி பேட்ஸ் 29 ரன், அடுத்து வந்த கெர் 1 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர்.
தொடர்ந்து சோபி டெவைன் மற்றும் புரூக் ஹாலிடே ஜோடி சேர்ந்தனர். இருவரும் நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தனர். இதன் காரணமாக இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். இதில் சோபி டெவைன் 63 ரன்னிலும், புரூக் ஹாலிடே 69 ரன்னிலும் அவுட் ஆகினர். தொடர்ந்து களம் கண்ட மேடி க்ரீன் 25 ரன், இசபெல்லா கேஸ் 12 ரன், ரோஸ்மேரி மைர் 2 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர்.
இறுதியில் நியூசிலாந்து அணி 50 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 227 ரன்கள் எடுத்தது. வங்காளதேசம் தரப்பில் ரெபேயா கான் 3 விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து 228 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் ஆட உள்ளது.