நாங்கள் இந்தியாவில் விளையாடுவதை போன்ற உணர்வை பெற்றோம் - ஜஸ்ப்ரீத் பும்ரா பேட்டி


நாங்கள் இந்தியாவில் விளையாடுவதை போன்ற உணர்வை பெற்றோம் - ஜஸ்ப்ரீத் பும்ரா பேட்டி
x

Image Courtesy: AFP

தினத்தந்தி 10 Jun 2024 3:30 AM GMT (Updated: 10 Jun 2024 3:32 AM GMT)

டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி இருந்தது.

நியூயார்க்,

20 அணிகள் கலந்து கொண்டுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திய நேரப்படி நேற்று இரவு 8 மணிக்கு நியூயார்க்கில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 119 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய தரப்பில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 42 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 120 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 113 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன் மூலம் 6 ரன் வித்தியாசத்தில் இந்தியா திரில் வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ஜஸ்ப்ரீத் பும்ரா 3 விக்கெட்டும், ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து இந்த ஆட்டத்தில் சிறப்பாக பந்துவீசிய ஜஸ்ப்ரீத் பும்ராவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

இதையடுத்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, இது நல்ல உணர்வை கொடுக்கிறது. நாங்கள் கொஞ்சம் கீழே இருந்தது போன்ற உணர்வை எதிர்கொண்டோம். சூரியன் வெளியே வந்ததும் பிட்ச் கொஞ்சம் நன்றாக மாறியது. அதைப் பயன்படுத்தி நாங்கள் கட்டுக் கோப்புடன் நன்றாக பந்து வீசினோம்.

குறிப்பாக சீம் பகுதியை முடிந்தளவுக்கு தரையில் படும் வகையில் வீச முயற்சித்தேன். முடிந்தளவுக்கு திட்டத்தை செயல்படுத்துவதில் தெளிவாக இருக்க முயற்சித்தேன்.அது நன்றாக வந்ததற்காக மகிழ்ச்சி. நாங்கள் இந்தியாவில் விளையாடுவதை போன்ற உணர்வை பெற்றோம்.

எங்களுக்கு ரசிகர்கள் கொடுத்த ஆதரவுக்காக மகிழ்ச்சி. அது தான் எங்களுக்கு களத்தில் எனர்ஜியை கொடுத்தது. தற்போது நாங்கள் கவனமாக இருக்கிறோம். கடந்த 2 போட்டிகளிலும் நன்றாக விளையாடினோம். இதே செயல்பாடுகளைப் பின்பற்றி நன்றாக விளையாட முயற்சிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story