கர்ப்பிணி யானையை கொன்ற அரக்கர்கள் - குஷ்பு, சிம்ரன், அமலாபால் ஆவேசம்


கர்ப்பிணி யானையை கொன்ற அரக்கர்கள் - குஷ்பு, சிம்ரன், அமலாபால் ஆவேசம்
x
தினத்தந்தி 5 Jun 2020 1:29 AM GMT (Updated: 5 Jun 2020 1:29 AM GMT)

கர்ப்பிணி யானையை கொன்றவர்கள் அரக்கர்கள் என்று நடிகைகள் குஷ்பு, சிம்ரன், அமலாபால் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.


கேரளாவில் உள்ள பாலக்காடு பகுதியில் பசியால் சுற்றி திரிந்த கர்ப்பிணி யானைக்கு சிலர் அன்னாசி பழத்துக்குள் வெடி மருந்துகளை வைத்து சாப்பிட கொடுத்து கொலை செய்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதற்கு பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

நடிகை குஷ்பு வெளியிட்டுள்ள வீடியோவில் பேசி இருப்பதாவது:-

“பசியோடு இருக்கும் ஒரு கர்ப்பிணி யானைக்கு வெடிகுண்டுகளோடு பழத்தை கொடுத்து துடிக்க துடிக்க சாகடித்து இருக்கிறீர்களே நீங்கள் மனிதர்களா?. மிருகங்கள் அவைகளா? அல்லது நம்மளா? என்று யோசிக்க வேண்டி உள்ளது. எப்படி இதை செய்துவிட்டு நிம்மதியாக தூங்கவும் வாழவும் முடிகிறது. இது கொடூரமானது. மனிதனின் ஆறாவது அறிவை இப்படி கீழ்த்தரமான செயலுக்கு பயன்படுத்தலாமா? சைக்கோத்தனமாக இப்படி செய்வது கேவலம். வாயில்லாத பிராணியை இப்படி செய்தது கஷ்டமாக உள்ளது. மனிதர்கள் என்று நம்மை சொல்லி கொள்ளவே வெட்கமாக உள்ளது.” என்று குஷ்பு கூறியுள்ளார்.

நடிகை அமலாபால் சமூக வலைத்தளத்தில், “கர்ப்பிணி யானையை கொன்றவர்களை கர்ம வினை தண்டிக்கும் யானைக்கு செய்ததை போலவே சம்பந்தப்பட்ட மனிதர்களுக்கும் பட்டாசை வைத்து வெடிக்க வைக்க வேண்டும். இந்த செயலை செய்தது மனித உருவில் இருக்கும் அரக்கர்கள்.” என்று சாடியுள்ளார்.

நடிகை சிம்ரன் டுவிட்டர் பக்கத்தில், “இந்த சம்பவத்தை கேள்விப்பட்டதும் எனது இதயமே நொறுங்கி விட்டது. இதனை ஏற்றுக்கொள்ளவே முடியாது. விலங்குகள் மீதான இத்தகைய வன்முறைகள் கண்டிப்பாக தடுத்து நிறத்தப்பட வேண்டும். இந்த உலகத்தில் பாதுகாப்போடு வாழ்வதற்கான தகுதி விலங்குகளுக்கும் உள்ளது.” என்று கூறியுள்ளார்.

நடிகை வரலட்சுமி சரத்குமார் சமூக வலைத்தளத்தில். “மனிதர்கள்தான் அரக்கர்களாக உள்ளனர். படிப்பறிவுக்கும் மனித நேயம், பரிதாபம், பொது அறிவு போன்றவற்றுக்கும் சம்பந்தம் இல்லை என்பதை இந்த சம்பவம் நிரூபித்து இருக்கிறது. இது அருவெருப்பானது. யானையை கொன்ற அரக்கர்கள் கொரோனா வந்து சாவார்கள் என்று நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.


Next Story