புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.1 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்டப்பணிகள் கலெக்டர் ஆய்வு


புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.1 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்டப்பணிகள் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 23 Dec 2016 3:00 AM IST (Updated: 22 Dec 2016 7:51 PM IST)
t-max-icont-min-icon

புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.1 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். வளர்ச்சி திட்டப்பணிகள் செங்கம் தாலுகா புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.1 கோடி மதி

செங்கம்,

புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.1 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வளர்ச்சி திட்டப்பணிகள்

செங்கம் தாலுகா புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.1 கோடி மதிப்பில் தார் சாலை அமைத்தல், பசுமை வீடுகள், இந்திரா நினைவு குடியிருப்பு வீடுகள், தனிநபர் இல்ல கழிவறை கட்டுதல், நெற்களம் அமைக்கும் பணிகள் உள்பட பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. அதனை மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

முதலில் புதுப்பாளையம் ஆதிதிராவிடர் மாணவ, மாணவிகள் விடுதிகளுக்கு சென்ற கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே, விடுதிகளில் மாணவர்களுக்கு தேவையான குடிநீர், கழிவறை வசதி செய்யப்பட்டுள்ளதா? விடுதி சுகாதாரமாக உள்ளதா? என ஆய்வு மேற்கொண்டார்.

மாணவர்களின் படிக்கும் அறை மற்றும் அங்குள்ள சமையல் கூடம் ஆகியவற்றை பார்வையிட்டார். தொடர்ந்து மாணவர்களுக்கு தேவையான பொது அறிவு நூல்களை வாங்கி வைக்க வேண்டும் என்று கலெக்டர் அறிவுறுத்தினார்.

சிகிச்சை அளிக்கப்படும் முறை

தொடர்ந்து புதுப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு பணியில் இருந்த டாக்டரிடம், நோயாளிகளின் வருகை, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் முறை மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் நோயாளிகளிடமும் குறைகளை கேட்டறிந்தார்.

பின்னர் புதுப்பாளையம் ஒன்றியத்தில் கட்டப்பட்டு வரும் பசுமை வீடுகள், இந்திரா நினைவு குடியிருப்பு வீடுகளை கலெக்டர் பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

ரேஷன் கடை

ஆலத்தூர் ரேஷன் கடையில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா? என ஆய்வு செய்தார். பின்னர் பொருட்களின் இருப்பு பதிவேட்டை பார்வையிட்டார். இதையடுத்து ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு சென்று மாணவர்களின் கல்வி திறனை கலெக்டர் சோதனை செய்தார்.

ஆய்வின்போது செங்கம் தாசில்தார் காமராஜ், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் மணிஎழிலன், முருகன் உள்பட அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.



Next Story