காரிமங்கலம் அருகே நிலத்தகராறில் விவசாயி அடித்துக்கொலை பெண் உள்பட 3 பேர் கைது


காரிமங்கலம் அருகே நிலத்தகராறில்  விவசாயி அடித்துக்கொலை பெண் உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 20 Jan 2017 4:15 AM IST (Updated: 19 Jan 2017 9:18 PM IST)
t-max-icont-min-icon

காரிமங்கலம் அருகே நிலத்தகராறில் விவசாயி அடித்துக்கொலை செய்யப்பட்டார்.

காரிமங்கலம்,

நிலத்தகராறு

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள நடுகொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி (வயது 60), விவசாயி. இவருடைய உறவினர் முனியப்பன் (47). சின்னசாமியின் மகன் மணிகண்டன். இவர் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் சென்ற போது முனியப்பனின் தாயார் முனியம்மாள் சாலையின் குறுக்கே சென்றார். அப்போது முனியம்மாளுக்கும், மணிகண்டனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதுகுறித்து முனியம்மாள் தனது மகன் முனியப்பனிடம் தெரிவித்துள்ளார். அதைத்தொடர்ந்து முனியப்பன், அவருடைய மகன் நாகன், உறவினர்கள் முருகன், பொன்னுராஜ், திருமுருகன், பிரசாந்த் உள்ளிபட்ட 11 பேர், மணிகண்டன் வீட்டுக்கு சென்று சின்னசாமி மற்றும் குடும்பத்தினர் பத்மா, மோகன்ராஜ், ரசிகா, சிவாஜி ஆகிய 5 பேரையும் சரமாரியாக தாக்கினர். இதில் அவர்கள் அனைவரும் படுகாயம் அடைந்தனர். இதில் சின்னசாமி, பத்மா ஆகிய 2 பேரும் சேலம் அரசு ஆஸ்பத்திரியிலும், மோகன்ராஜ், ரசிகா, சிவாஜி ஆகிய 3 பேரும் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

விவசாயி பரிதாப சாவு

இந்தநிலையில் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சின்னசாமி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து காரிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஸ்குமார், முனியப்பன் உள்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். மேலும் இதுதொடர்பாக முனியப்பன், நாகன், உறவினர் பழனியம்மாள் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள 8 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story