வில்லியனூர் லூர்து மாதா ஆலயத்தில் கிரண்பெடி ஆய்வு


வில்லியனூர் லூர்து மாதா ஆலயத்தில் கிரண்பெடி ஆய்வு
x
தினத்தந்தி 15 May 2017 4:30 AM IST (Updated: 15 May 2017 3:47 AM IST)
t-max-icont-min-icon

வில்லியனூர் லூர்து மாதா ஆலயத்தில் கிரண்பெடி ஆய்வு, குளத்தை சுத்தமாக பராமரிக்கும்படி வேண்டுகோள்

வில்லியனூர்

வில்லியனூரில் உள்ள பிரசித்தி பெற்ற லூர்து மாதா ஆலயத்தில் கவர்னர் கிரண்பெடி திடீர் ஆய்வு செய்தார். ஆலய குளத்தை பராமரிக்கும்படியும், பக்தர்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரவும் அவர் கேட்டுக்கொண்டார்.

கிரண்பெடி ஆய்வு

புதுச்சேரி மாநில கவர்னர் கிரண்பெடி வார இறுதி நாட்களில், மாநிலத்தின் பல்வேறு இடங்களுக்கு சென்று சுகாதாரப் பணிகளை ஆய்வு செய்து வருகிறார். நீர் ஆதாரங்களை பேணிக் காக்க மக்களிடம் வலியுறுத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை கிரண்பெடி கவர்னர் மாளிகையில் இருந்து வில்லியனூரில் உள்ள பிரசித்தி பெற்ற லூர்து மாதா ஆலயத்துக்கு சென்று ஆய்வு பணிகளில் ஈடுபட்டார். ஆலயத்துக்கு வந்த கவர்னரை, ஆலயத்தின் பங்குத்தந்தை மற்றும் நிர்வாகிகள் வரவேற்று அழைத்துச் சென்றனர். ஆலயத்தின் சிறப்புகள் பற்றி கவர்னருக்கு அவர்கள் விளக்கினர்.

பிரார்த்தனை செய்தார்

அப்போது ஆலய வளாகத்தில் பிரார்த்தனைக் கூடத்தில் அமர்ந்து கவர்னர் கிரண்பெடி பிரார்த்தனையில் ஈடுபட்டார். இதன்பின் ஆலய வளாகத்தில் உள்ள குளத்தை பார்வையிட்டார். அப்போது கிறிஸ்தவ தலமான இந்த மாதா ஆலயத்தில் மட்டும் குளம் அமைந்துள்ளதன் காரணத்தையும், வரலாற்றையும் கேட்டு தெரிந்து கொண்டார்.

குளத்தை சுத்தமாக பராமரிக்கும்படி நிர்வாகிகளை கேட்டுக்கொண்டார். மாதா ஆலயத்துக்கு வரும் பக்தர்களுக்கு குடிநீர் உள்பட அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்கும்படி அவர் கேட்டுக்கொண்டார். பின்னர் மாதா ஆலயத்தில் இருந்து, கவர்னர் மாளிகைக்கு புறப்பட்டுச் சென்றார். 

Next Story