டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் காரை முற்றுகையிட்டு பொதுமக்கள் கோரிக்கை

கோவில்பட்டி அருகே ஆலம்பட்டியில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
கோவில்பட்டி,
கோவில்பட்டி அருகே ஆலம்பட்டியில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 1–ந்தேதி அப்பகுதி மக்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டனர்.
இதனால் மது பானங்கள் ஏற்றி வந்த லாரி திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது. அந்த டாஸ்மாக் கடை திறக்கப்படவில்லை. இந்த நிலையில் நேற்று மாலையில் ஆலம்பட்டி பகுதி மக்கள் மீண்டும் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டனர். அப்போது அந்த வழியாக காரில் வந்த அமைச்சர் கடம்பூர் ராஜூ காரை முற்றுகையிட்டு, பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அவர்களிடம் அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
தொடர்ந்து டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் அமைச்சரிடம் கோரிக்கை மனு வழங்கினர். மனுவை பெற்று கொண்ட அவர், இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி, உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.