ராஜபாளையம் அருகே கற்கால மனிதர்கள் வாழ்ந்த குகைகள் கண்டுபிடிப்பு


ராஜபாளையம் அருகே கற்கால மனிதர்கள் வாழ்ந்த குகைகள் கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 5 Sep 2017 10:30 PM GMT (Updated: 5 Sep 2017 7:45 PM GMT)

ராஜபாளையம் அருகே 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கற்கால மனிதர்கள் வாழ்ந்த குகைகளும் பாறை ஓவியங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ராஜபாளையம்,

நெல்லை பாளையங்கோட்டையை சேர்ந்த தொல்லியல் ஆய்வாளரும் அரசு பள்ளிதமிழ் ஆசிரியருமான சங்கரநாராயணன் இதுதொடர்பாக கூறியிருப்பதாவது:–

ராஜபாளையத்தில் இருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில் 5 குன்றுகள் உள்ளன. இதில் ஒரு குன்றில் நுண்கற்கால மனிதர்கள் வாழ்ந்த பல சிறிய குகைகள் உள்ளன. அவற்றில் 3 குகைகளில் 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வெள்ளை நிறத்தில் தீட்டப்பட்டுள்ள பாறை ஓவியங்கள் அமைந்துள்ளன.

இதனை நானும் மாங்குடியை சேர்ந்த மலைக்கனி என்பவரும் சேர்ந்து ஆய்வு நடத்தி கண்டறிந்தோம். இந்த பாறை ஓவியத்தில் வேட்டைகாட்சிகள் காணப்படுகின்றன. அதிலும் குறிப்பாக மனிதர்கள் சிலர் ஒரு புலியை சுற்றி வளைத்து தாக்குவது போன்ற காட்சி சிறப்பாக தீட்டப்பட்டுள்ளது.

மற்றொரு கூட்டத்தினர் வேறொரு விலங்கை சுற்றி வளைத்து பிடித்து தன்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து ஆரவாரம் செய்கிற காட்சியையும், கையில் ஆயுதங்களுடன் நிற்கும் மனிதர்களையும் சூரியன் காட்சியையும் வேட்டையாடிய விலங்கை கையில் பிடித்துக்கொண்டு வரும் மனிதனையும் வரைந்துள்ளனர். மேலும் யானையின் உருவத்தையும் கருவுற்ற விலங்குகளின் உருவத்தையும் அந்த கூட்டத்தின் தலைவனையும் அழகாக தீட்டி இருக்கின்றனர். இன்னும் பல கோணங்களில் ஆய்வு செய்வதற்கும் இந்த பாறை ஓவியங்கள் இடம் அளிப்பதாக அமைந்துள்ளன.

இந்த பாறை ஓவியங்கள் உள்ள குகைகள் மற்றும் இதனை சுற்றியுள்ள பழங்கால மனிதர்கள் வாழ்ந்த சில குகைகளையும் கொண்டுள்ள இந்த குன்றினை பாதுகாக்கப்பட்ட தொன்மரபு சின்னமாக தொல்லியல்துறை உடனடியாக அறிவித்து பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மீனாட்சிபுரம் கிராமம் மாங்குடி என்ற கிராமத்தோடு இணைந்த பகுதியாக உள்ளது. இதில் மாங்குடி நெல்லை மாவட்ட பகுதியில் உள்ளது. சங்ககால புலவர் மாங்குடி மருதனார் பிறந்த ஊர் மாங்குடியாகும். இதனை மெய்ப்பிக்கும் வகையில் கடந்த 2002–ம் ஆண்டு இங்கு தொல்லியல் துறை, அகழாய்வு மேற்கொண்டுள்ளது. அந்த அகழாய்வில் இங்கு நுண் கற்காலம், புதிய கற்காலம், பெருங்கற்காலம், சங்க காலம், இடைக்காலம் என தொடர்ச்சியாக மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.

மேலும் இவர்கள் சீன நாட்டோடும் ரோமானிய நாட்டோடும் தொடர்பு கொண்டிருந்தனர் என்பதற்கான சான்றுகளும் கிடைத்துள்ளன. இந்த தகவலையும் சங்கரநாராயணன் தெரிவித்துள்ளார்.


Next Story