அரசு பணியை ராஜினாமா செய்தது ஏன்? ஆசிரியை சபரிமாலா பேட்டி


அரசு பணியை ராஜினாமா செய்தது ஏன்? ஆசிரியை சபரிமாலா பேட்டி
x
தினத்தந்தி 8 Sept 2017 5:30 AM IST (Updated: 8 Sept 2017 1:46 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் ராஜினாமா கடிதத்தை கொடுத்துவிட்டு வெளியே வந்த ஆசிரியை சபரிமாலா, நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

விழுப்புரம் ,

நேற்று வரை அரசு பள்ளி ஆசிரியை. இன்றைய தினத்தில் இருந்து சமூக போராளி. மாணவி அனிதாவின் மரணம் மிகப்பெரிய கல்வி எழுச்சியையும், தூங்க விடாத தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு தமிழகம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள் தன்னெழுச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கு காரணமான ‘நீட்’ தேர்வை ரத்து செய்யவும், இந்தியா முழுவதும் ஒரே கல்வி திட்டத்தை அமல்படுத்தக்கோரியும் நான் பணியாற்றிய எனது பள்ளி முன்பு மரத்தடியில் அமர்ந்து எனது மகனுடன் அமைதியான முறையில் சமூக கோபத்தை வெளிப்படுத்தினேன். இதற்கு நான் பார்க்கும் அரசு பணி தடையாக இருந்தது.

என்னுடைய சமூக கோபத்தை, சுதந்திர உணர்வை, தேச பக்தியை வெளிப்படுத்தக்கூடிய உணர்வை தடுக்கக்கூடிய அப்படிப்பட்ட அரசு பணி எனக்கு தேவையில்லை என முடிவு செய்து இந்த பணியை நான் மனவேதனையோடு ராஜினாமா செய்துள்ளேன்.

எனக்கு தற்போது 35 வயது ஆகிறது. இன்னும் 23 ஆண்டுகள் பணி செய்ய காலம் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் நான் எடுத்துள்ள இந்த முடிவினால் ரூ.1½ கோடி பணப்பலன்களை இழக்க நேரிடுகிறது. என்னுடைய முடிவை சரி என்று யாருமே சொல்லவில்லை. வெள்ளையர்களை விரட்ட ஐ.ஏ.எஸ். பதவியை தூக்கி எறிந்துவிட்டு போராட்டம் நடத்திய நேதாஜி சுபாஷ் சந்திரபோசை மனதில் நினைத்து இந்த முடிவை எடுத்துள்ளேன்.

இந்த முடிவுக்கு என்னுடைய கணவர் 100 சதவீதம் முழு ஆதரவையும் கொடுத்துள்ளார். இந்த நேரத்தில் என்னை கஷ்டப்பட்டு படிக்க வைத்து ஆசிரியையாக உருவாக்கிய என்னுடைய பெற்றோரிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

நான் தற்போது பணியை ராஜினாமா செய்துள்ளதையடுத்து அடுத்தகட்டமாக நாளை (அதாவது இன்று) எனது வீட்டின் முன்பு தனியாக அமர்ந்து உண்ணாவிரத போராட்டம் நடத்தி என்னுடைய தன்னெழுச்சியை காட்டுவேன். அதன் பிறகு சமூகப்பணியில் ஈடுபட முடிவு செய்துள்ளேன். ‘கலாம்போல் ஆகலாம் மாணவர்கள்’ என்ற இயக்கத்தை அமைத்து, பள்ளி சென்று சந்திக்க முடியாத மாணவ-மாணவிகளை ஒவ்வொரு கிராமந்தோறும் சென்று சந்தித்து அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன். இனிவரும் காலங்களில் நான் கற்ற தமிழ் என்னை காக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story