நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு அளிக்கக்கோரி ஈரோட்டில் பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு அளிக்கக்கோரி ஈரோட்டில் பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 13 Sep 2017 11:15 PM GMT (Updated: 13 Sep 2017 5:58 PM GMT)

நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு அளிக்கக்கோரி ஈரோட்டில் பல்வேறு கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு,

மாணவி அனிதாவின் உயிரிழப்பிற்கு காரணமான மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு அளிக்கக்கோரியும் ஈரோட்டில் நேற்று பல்வேறு கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சு.முத்துசாமி தலைமை தாங்கினார்.

காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர்கள் ஈ.பி.ரவி (மாநகர்), மக்கள் ஜி.ராஜன் (தெற்கு), விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல அமைப்பு செயலாளர் நா.விநாயகமூர்த்தி, திராவிடர் கழக மாநில அமைப்பு செயலாளர் சண்முகம், உழவர் உழைப்பாளர் கட்சியின் நிறுவன தலைவர் செல்லமுத்து, மாவட்ட செயலாளர்கள் சலீம் (மனிதநேய மக்கள் கட்சி), தங்கமுத்து (பெருந்தலைவர் மக்கள் கட்சி), குமரகுருபரன் (தந்தை பெரியார் திராவிடர் கழகம்), அறிவழகன் (ஆதித்தமிழர் கட்சி) ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழு உறுப்பினர் கே.துரைராஜ், மாவட்ட செயலாளர்கள் கே.திருநாவுக்கரசு (இந்திய கம்யூனிஸ்டு கட்சி), எம்.நூர்முகமது (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்), ஏ.சித்திக் (தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்) ஆகியோர் பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் கண்டன கோ‌ஷங்கள் எழுப்பினார்கள்.

இதில் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.எம்.பழனிச்சாமி, காங்கிரஸ் கட்சி சிறுபான்மை பிரிவு துணைத்தலைவர் கே.என்.பாட்சா, விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர செயலாளர் அம்ஜத்கான், மாவட்ட செய்தி தொடர்பாளர் பைஜில் அகமது, மாவட்ட துணைச்செயலாளர் அக்பர் அலி, இஸ்லாமிய ஜனநாயக பேரவையின் மாவட்ட அமைப்பாளர் ஜாபர் அலி, தி.மு.க. மாநில நெசவாளர் அணி செயலாளர் சச்சிதானந்தம், முன்னாள் எம்.பி. கந்தசாமி, மாநில கொள்கை பரப்பு இணைச்செயலாளர் சந்திரகுமார், மாவட்ட துணைச்செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் பழனிச்சாமி உள்பட பல்வேறு கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.


Next Story