தசரா விழா கோலாகலம்: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் சூரசம்ஹாரம்


தசரா விழா கோலாகலம்: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் சூரசம்ஹாரம்
x
தினத்தந்தி 1 Oct 2017 4:30 AM IST (Updated: 1 Oct 2017 3:37 AM IST)
t-max-icont-min-icon

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில் சூரசம்ஹாரம் நடந்தது. விழாவில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

குலசேகரன்பட்டினம்,

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் உடனுறை ஞானமூர்த்தீசுவரர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றது. இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக இங்குதான் பல லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து, பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபடுகின்றனர். நவராத்திரி விழாவே இங்கு தசரா திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.

முத்தாரம்மன் கோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா கடந்த 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து நேர்த்திக்கடனாக பல்வேறு நாட்கள் விரதம் இருந்த பக்தர்கள் காப்பு அணிந்து, பல்வேறு வேடங்களை அணிந்தனர்.

ஒவ்வொரு ஊரிலும் விரதம் இருந்து வேடம் அணிந்த பக்தர்கள், அங்குள்ள கோவில் அருகில் குடில் அமைத்து தங்கியிருந்து ஒரு வேளை பச்சரிசி உணவு மட்டும் சாப்பிட்டு அம்மனை வழிபட்டனர். வேடம் அணிந்த பக்தர்கள் ஊர் ஊராக சென்று, காணிக்கை வசூலித்து, 10-ம் திருநாளில் கோவிலில் செலுத்தினர்.

விழா நாட்களில் கோவிலில் தினமும் காலை, மதியம், மாலை, இரவில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், மாலையில் சமய சொற்பொழிவு, கலைநிகழ்ச்சி நடந்தது. தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில், பல்வேறு திருக்கோலத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 10-ம் திருநாளான நேற்று நடந்தது. இதையொட்டி காலையில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இரவு 11 மணி அளவில் அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. 12 மணி அளவில் அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரைக்கு புறப்பட்டார். அப்போது காளி வேடம் அணிந்த பக்தர்கள் அம்மனை பின்தொடர்ந்து அணிவகுத்து சென்றனர். கோவில் கடற்கரை சிதம்பரேசுவரர் கோவிலுக்கு முன்பாக அம்மன் எழுந்தருளி, மகிஷாசூரனை வதம் செய்யும் மகிஷா சூரசம்ஹாரம் நடந்தது.

அப்போது கூடியிருந்த பல லட்சக்கணக்கான பக்தர்கள் ‘ஓம் காளி ஜெய் காளி‘ போன்ற பக்தி கோஷங்களை விண்ணதிர எழுப்பினர். பின்னர் கடற்கரை மேடையில் எழுந்தருளிய அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து சிதம்பரேசுவரர் கோவிலில் எழுந்தருளிய அம்மனுக்கு சாந்தாபிஷேக ஆராதனைகள் நடந்தது. பின்னர் அம்மன் தேரில் எழுந்தருளி பவனி வந்தார்.

விழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து அம்மனை வழிபட்டனர். நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்தும் குலசேகரன்பட்டினத்துக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தது.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் மேற்பார்வையில், மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் கந்தசாமி, ராஜாராம், திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தீபு தலைமையில் சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

11-ம் திருநாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு பூஞ்சப்பரத்தில் அம்பிகை வீதி உலா புறப்படுதல், மாலை 5.30 மணிக்கு அம்மன் கோவில் வந்து சேர்தல், மாலை 6 மணிக்கு காப்பு களைதல், இரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம் நடைபெறும்.

12-ம் திருநாளான நாளை (திங்கட்கிழமை) காலை 6 மணி, 8 மணி, 10 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், மதியம் 12 மணிக்கு சிறப்பு பாலாபிஷேகத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

விழா ஏற்பாடுகளை கோவில் தக்காரும், உதவி ஆணையருமான ரோஜாலி சுமதா, இணை ஆணையர் பரஞ்சோதி, செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.


Next Story