பால்கரில் கோர விபத்து கார் ஆற்றுக்குள் பாய்ந்து தாய்- மகன் பலி


பால்கரில் கோர விபத்து கார் ஆற்றுக்குள் பாய்ந்து தாய்- மகன் பலி
x
தினத்தந்தி 2 Oct 2017 3:30 AM IST (Updated: 2 Oct 2017 2:40 AM IST)
t-max-icont-min-icon

பால்கரில் கார் ஆற்றுக்குள் பாய்ந்த கோர விபத்தில் தாய், மகன் பரிதாபமாக உயிரிழந்தனர்.

வசாய்,

அகோலாவை சேர்ந்தவர் விவேக்(வயது65). இவரது மனைவி சுவப்னா(62). இவர்களது மகன் சுயோக் (32). இவர்கள் தசரா விடுமுறையையொட்டி சூரத்திற்கு காரில் சுற்றுலா சென்றிருந்தனர். பின்னர் மும்பையில் உள்ள உறவினர் ஒருவர் வீட்டிற்கு செல்வதற்காக வந்து கொண்டிருந்தனர்.
காரை சுயோக் ஓட்டி வந்தார். நேற்று காலை கார் பால்கர் மாவட்டம் காசா பகுதியில் வந்து கொண்டிருந்தது. அங்குள்ள சூர்யா ஆற்றுபாலத்தில் வந்தபோது, திடீரென கார் சுயோக்கின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடியது.

கண்இமைக்கும் நேரத்தில் அந்த கார் பாலத்தின் தடுப்புச்சுவர் மீது மோதி ஆற்றுக்குள் பாய்ந்தது. கார் விழுந்த இடத்தில் தண்ணீர் இல்லாததால் தரையில் மோதி அப்பளம் போல் நொறுங்கியது. இந்த கோர விபத்தில் சுவப்னாவும், சுயோக்கும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்து போனார்கள். விவேக் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.

விபத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விவேக்கை மீட்டு சிகிச்சைக்காக காசா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

மேலும் விபத்தில் பலியான தாய், மகன் இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story