உடுமலை அரசு கலைக்கல்லூரி மாணவ-மாணவிகள் போராட்டம்


உடுமலை அரசு கலைக்கல்லூரி மாணவ-மாணவிகள் போராட்டம்
x
தினத்தந்தி 25 Jan 2018 3:45 AM IST (Updated: 25 Jan 2018 1:43 AM IST)
t-max-icont-min-icon

அரசு பஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து உடுமலை அரசு கலைக்கல்லூரி மாணவ-மாணவிகள் கல்லூரி வளாகத்திற்குள் போராட்டம் நடத்தினார்கள்.

உடுமலை,

தமிழக அரசு பஸ் கட்டணத்தை அதிரடியாக உயர்த்தியது. இந்த கட்டண உயர்வால் அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தினக்கூலிக்கு செல்லும் தொழிலாளர்கள் உழைப்பின் பெரும்பகுதி வருமானத்தை பஸ் கட்டணமாக கொடுக்க வேண்டி உள்ளதாக கூறுகிறார்கள். அது மட்டுமல்லாமல் கல்லூரி மாணவ-மாணவிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பஸ் கட்டண உயர்வுக்கு பல்வேறுஅரசியல் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். மேலும் பொதுமக்களும், பஸ்சில் பயணம் செய்யும் பயணிகளும் தங்களது எதிர்ப்பை ஆர்ப்பாட்டம், சாலை மறியல், பஸ் சிறைபிடிப்பு என பல்வேறு வழிகளில் தெரியப்படுத்தி வருகிறார்கள்.

இதற்கிடையில் அரசு பஸ் கட்டண உயர்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தும், பஸ் கட்டண உயர்வை உடனே திரும்பப்பெறக்கோரியும், சென்னை, மதுரை, கோவை உள்பட பல்வேறு மாவட்டங்களில் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம், சாலைமறியல், மனிதச்சங்கிலி என பல கட்ட தொடர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

மாணவர்களின் போராட்டத்திற்கு வலுசேர்க்கும் விதமாக திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள அரசு கலைக்கல்லூரி மாணவ- மாணவிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடுமலை அரசு கலைக்கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு உள்ளது. இந்த பட்டப்படிப்புகள் 2 ஷிப்ட் முறையில் இயங்குகிறது. தற்போது இளநிலை பட்டப்படிப்பு படித்து வரும், மாணவர்களுக்கு இண்டர்னல் தேர்வு நடந்து வருகிறது. ஆனால் முதுகலை படித்து வருபவர்களுக்கு வழக்கம் போல வகுப்புகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில் இளநிலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவ-மாணவிகள் நேற்று காலை வழக்கம்போல் கல்லூரிக்கு வந்தனர். பின்னர் கல்லூரியில் நடந்த இண்டர்னல்தேர்வை எழுதினார்கள். இந்த தேர்வு காலை 11.30 மணிக்கு முடிந்தது. பின்னர் அனைவரும் தேர்வை அறையை விட்டு வெளியே வந்து, கல்லூரி வளாகத்தில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தமிழக அரசு உயர்த்தி உள்ள பஸ் கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்தும், கட்டண உயர்வை திரும்பப்பெறக்கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தால் கல்லூரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சுமார் ஒரு மணி நேரம் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டம் முடிந்ததும் அனைத்து மாணவ-மாணவிகளும் அமைதியாக கலைந்து சென்றனர். 

Next Story