மும்பை பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட கர்காரே குறித்த வழக்கு தள்ளுபடி


மும்பை பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட கர்காரே குறித்த வழக்கு தள்ளுபடி
x
தினத்தந்தி 29 Jan 2018 4:56 AM IST (Updated: 29 Jan 2018 4:56 AM IST)
t-max-icont-min-icon

மராட்டிய பயங்கரவாத தடுப்புப்படை தலைவராக பணியாற்றியவர் ஹேமந்த் கர்காரே. இவர் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ந்தேதி கடல் வழியாக மும்பையில் நுழைந்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

மும்பை,

கடந்த 2010-ம் ஆண்டு பீகாரை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. ராதாகாந்த் யாதவ் என்பவர் மும்பை ஐகோர்ட்டில் பொதுநலன் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், “ஹேமந்த் கர்காரேவை சுட்டுக்கொன்றது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் அல்ல.

இந்தியாவில் உள்ள வலதுசாரி பயங்கரவாதிகளே இந்த கொடூர செயலை செய்துள்ளனர் என்றும், 2008-ம் ஆண்டு மாலேகாவில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய வலதுசாரி பயங்கரவாதிகள் பலரை ஹேமந்த் கர்காரே கைது செய்து நடவடிக்கை மேற்கொண்ட ஆத்திரத்திலேயே அவர் கொல்லப்பட்டதாகவும்” கூறியிருந்தார்.

மேலும் இதுகுறித்து விசாரணை நடத்த குழு ஒன்றை அமைக்கவேண்டும் என்றும் தனது மனுவில் வலியுறுத்தி இருந்தார்.

இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, ராதாகாந்த் யாதவ் தாக்கல் செய்த மனுவில் முகாந்திரம் இல்லை என கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Next Story