தூக்குப்போட்டு மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலை


தூக்குப்போட்டு மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலை
x
தினத்தந்தி 5 Feb 2018 4:45 AM IST (Updated: 5 Feb 2018 1:29 AM IST)
t-max-icont-min-icon

கிருமாம்பாக்கத்தில் மருத்துவக்கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பாகூர்,

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் தீபன், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி முனீஸ்வரி, இவர் மாவட்ட மருத்துவமனை அதிகாரியாக உள்ளார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

இவர்களின் மூத்த மகன் ஜிம்சன் காட்வின் (வயது 22). இவர் புதுச்சேரி மாநிலம் அரியூரில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரியில் 3-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ். பட்டப்படிப்பு படித்து வந்தார். கிருமாம்பாக்கம் அருகே உள்ள பெலிக்கான்சிட்டி குடியிருப்பில் வாடகை வீட்டில் தங்கியிருந்து கல்லூரிக்கு சென்று வந்தார்.

இந்த நிலையில் கடந்த 28-ந் தேதி மாணவர் ஜிம்சன் காட்வின் வீட்டில் ஜன்னலில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். அதைப் பார்த்த அவருடைய நண்பர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பிள்ளையார்குப்பத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்தார்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக அவரை சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் ஜிம்சன்காட்வின் பரிதாபமாகச் செத்தார்.

இந்த சம்பவம் குறித்து புகாரின்பேரில் கிருமாம்பாக்கம் போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கம், ஏட்டு ராதா கிருஷ்ணன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதில் ஜிம்சன் காட்வின் ஏற்கனவே தற்கொலைக்கு முயன்றிருப்பது தெரிய வந்தது. அவர் தற்கொலைக்கு என்ன காரணம் என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story