ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 Feb 2018 3:15 AM IST (Updated: 6 Feb 2018 1:45 AM IST)
t-max-icont-min-icon

கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சின்னசேலம்,

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சின்னசேலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தணிக்கையாளர் ரங்கசாமி தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் கருணாநிதி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாநில பொருளாளரும், வட்டார வளர்ச்சி அலுவலருமான நாகராஜன் கலந்து கொண்டு சங்க கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்கவேண்டும், சமூகவிரோதிகள் அச்சுறுத்தலை தடுக்கவேண்டும், ஊரக வளர்ச்சித்துறையை நலிந்து போகாமல் பாதுகாக்கவேண்டும், சமீபத்தில் காணை ஊராட்சி ஒன்றிய பணி மேற்பார்வையாளரை தாக்கிய ஆரியூர் ஊராட்சியை சேர்ந்த நபரை போலீசார் உடனே கைது செய்யவேண்டும் என்பன உள்பட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் வட்ட பொருளாளர் அண்ணாமலை, வட்ட இணை செயலாளர் மகாலட்சுமி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன், ஒன்றிய பணி மேற்பார்வையாளர் குணசெல்வி, கணக்கர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story