நாற்கர சாலையில் கவிழ்ந்த மினி லாரி; டிரைவர்- கிளனர் காயம்


நாற்கர சாலையில் கவிழ்ந்த மினி லாரி; டிரைவர்- கிளனர் காயம்
x
தினத்தந்தி 14 Feb 2018 4:15 AM IST (Updated: 14 Feb 2018 1:11 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி அருகே நாற்கர சாலையில் மீன் லாரி கவிழ்ந்ததில் டிரைவர், கிளனர் காயம் அடைந்தனர். சாலையில் சிதறிய மீன்களை பொதுமக்கள் போட்டி போட்டு அள்ளிச்சென்றனர்.

கோவில்பட்டி,

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் இருந்து நேற்று காலையில் மீன் லோடு ஏற்றிய மினி லாரி ஒன்று மதுரைக்கு புறப்பட்டது. லாரியை மதுரை முல்லை நகரைச் சேர்ந்த நீலமேகன் மகன் மாயகண்ணன் (வயது 30) ஓட்டி வந்தார். அந்த லாரியில் மதுரை அருள்தாஸ்புரத்தைச் சேர்ந்த திலகர் மகன் அருள் (28) என்பவர் கிளனராக இருந்தார்.

மதியம் 1.45 மணி அளவில் கோவில்பட்டியை அடுத்த நாலாட்டின்புத்தூர் நாற்கரசாலை மேம்பாலம் அருகில் வந்த போது லாரியின் பின்பக்க டயர் திடீரென்று பயங்கர சத்தத்துடன் வெடித்தது.

டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடிய லாரி நாற்கர சாலையின் தடுப்பு சுவரில் மோதி நடுரோட்டில் கவிழ்ந்தது. இதில் டிரைவர் மாயகண்ணன், கிளனர் அருள் ஆகிய 2 பேரும் காயம் அடைந்தனர். லாரியில் இருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான மீன்கள் சாலையில் சிதறின.

விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் நாலாட்டின்புத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜூடி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். காயம் அடைந்த மாயகண்ணன், அருள் ஆகிய 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மீன் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளான தகவல் காட்டுத்தீ போல் அந்த பகுதியில் பரவியது. நாலாட்டின்புத்தூர் சுற்றுப்பகுதி மக்கள் திரண்டு வந்தனர். அவர்கள் சாலையில் சிதறி கிடந்த மீன்களை போட்டி போட்டு அள்ளிச் சென்றனர். அந்த வழியாக வாகனங்களில் வந்தவர்களும் வாகனத்தை நிறுத்தி விட்டு தாங்கள் வைத்திருந்த பைகளில் மீன்களை அள்ளிச் சென்றனர்.

இந்த விபத்து குறித்து நாலாட்டின்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story