10 லட்சம் இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி மராட்டிய பட்ஜெட்டில் அறிவிப்பு


10 லட்சம் இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி மராட்டிய பட்ஜெட்டில் அறிவிப்பு
x
தினத்தந்தி 10 March 2018 5:00 AM IST (Updated: 10 March 2018 4:01 AM IST)
t-max-icont-min-icon

அடுத்த 5 ஆண்டுகளில் 10 லட்சம் இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி வழங்கப்படும் என்றும், பாந்திரா-வெர்சோவா கடல்வழி பாலம் திட்டத்திற்கு ரூ.7,500 கோடி ஒதுக்கீடு செய்தும் மராட்டிய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

மும்பை,

மராட்டிய அரசின் 2018-19-ம் ஆண்டுக்கான பட்ஜெட் நேற்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.

நிதித்துறை மந்திரி சுதீர் முங்கண்டிவார் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இது அவருக்கு 4-வது பட்ஜெட் ஆகும். நிதித்துறை இணை மந்திரி தீபக் கேசர்கர் சட்ட மேலவையில் பட்ஜெட் உரையை வாசித்தார். இது ரூ.15 ஆயிரத்து 375 கோடி பற்றாக்குறை பட்ஜெட் ஆகும்.

இந்த பட்ஜெட்டில் விவசாயம், நீர்ப்பாசனம், போலீஸ் துறை ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, அவற்றிற்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் விவரம் வருமாறு.

சிவாஜி சிலைக்கு ரூ.300 கோடி

*மும்பை அரபிக்கடலில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜிக்கு பிரமாண்ட சிலை மற்றும் நினைவுச் சின்னம் அமைக்கப்படுகிறது. இந்த பணிக்காக ரூ.300 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. அரபிக்கடலில் சத்ரபதி சிவாஜி சிலை அமைக்கும் பணியை 36 மாதத்தில் முடிக்கப்படும்.

*மாநிலத்தில் பல்வேறு நீர்ப்பாசன திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. இந்த திட்டங்களுக்காக பட்ஜெட்டில் ரூ.8 ஆயிரத்து 233 கோடி நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

*மும்பை தாதர் இந்து மில்லில் சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் நினைவகம் அமைப்பதற்கு ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கடல்வழி பாலம்

*மும்பையில் செயல்படுத்தப்படும் பாந்திரா- வெர்சோவா கடல்வழி பால திட்டத்துக்கு ரூ.7 ஆயிரத்து 502 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது

*மராட்டியத்தில் வறட்சியில்லா கிராமங்களை உருவாக்க ஜல்யுக் ஷிவார் திட்டத்துக்கு ரூ.1,500 கோடி ஒதுக்கீடு.

*இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கீடு.

*விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு, விவசாய உற்பத்தி பொருட்களை கொண்டு செல்வதற்கு அரசு பஸ்கள் பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இளைஞர்களுக்கு பயிற்சி

*இளைஞர்களுக்கு வேலை வாய்பை உருவாக்கும் வகையில் 6 திறன்மேம்பாட்டு பல்கலைக்கழகங்கள் அமைக்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் அடுத்த 5 ஆண்டுகளில் மாநிலம் முழுவதும் 10 லட்சத்து 31 ஆயிரம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு தொழில் பயிற்சி வழங்கப்பட உள்ளது. திறன் மேம்பாட்டு பயிற்சியில் வேளாண்மை, தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறும் வகையில் சிறந்த பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.

*மாநில அரசு போக்குவரத்து கழக பஸ்களின் தரத்தை மேம்படுத்த ரூ.40 கோடி ஒதுக்கீடு

*மராட்டியத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மாணவர்களை போட்டி தேர்வுக்கு தயார் படுத்தும் வகையில் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்காக பட்ஜெட்டில் ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.

*மும்பை நகர்ப்புற 3-வது போக்குவரத்து திட்டம் மும்பை பெருநகர வளர்ச்சிக்குழுமம் மற்றும் சிட்கோ உதவியுடன் நிறைவேற்றப்படும்.

மும்பை- நாக்பூர் விரைவு சாலை

*விவசாய உற்பத்தி பொருட்களை சேமித்து வைக்கும் திட்டத்துக்காக பெரிய குடோன்கள் கட்டப்படும்.

*701 கி.மீ. தூரத்துக்கு அமையும் மும்பை- நாக்பூர் விரைவு சாலை பணிக்காக 64 சதவீத நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. வருகிற ஏப்ரல் மாதம் இந்த சாலை பணிகள் தொடங்கப்படும். இந்த பணிகள் 3 ஆண்டுகளில் முடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

*பெரிவார்ப்- மாண்ட்வா இடையே பயணிகள் படகு போக்குவரத்து சேவை ஏப்ரல் மாதம் தொடங்கப்படும்.

*மாநிலத்தில் புதிய சாலைகள் அமைக்கவும், பழுதடைந்த சாலைகளை சீரமைக்கவும் ரூ.10 ஆயிரத்து 828 கோடி ஒதுக்கீடு.

*நாக்பூர் விமான நிலையத்தை ரூ.100 கோடி செலவில் மேம்படுத்த திட்டம்.

*மாநில உள்துறைக்கு ரூ.13 ஆயிரத்து 385 கோடி ஒதுக்கீடு. இதில் ரூ.165 கோடி செலவில் மாநிலம் முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்கள் மற்றும் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.

*கடலோர போலீசாரின் ரோந்து பணிக்காக புதிதாக இரண்டு ரோந்து படகுகள் வாங்கப்படும்.

*மும்பையில் உள்ள ஹேப்கின் மையத்தில் தேசிய பாம்பு விஷ ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட உள்ளது.

*மாநிலம் முழுவதும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 50 கோடி மரக்கன்றுகளை நட திட்டமிடப்பட்டு உள்ளது.

*பழங்குடியின மேம்பாட்டு திட்டங்களுக்கு ரூ.8 ஆயிரத்து 900 கோடி ஒதுக்கீடு

*மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் இலவசமாக அவர்களுக்கு நகரும் ஸ்டால்கள் வழங்கப்படும்.

*சிறுபான்மை இன மக்களின் மேம்பாட்டுக்கு ரூ.350 கோடி ஒதுக்கீடு.

*விவசாயிகள் அதிகளவில் தற்கொலை செய்து கொண்ட 14 மாவட்டங்களில் ரூ.2-க்கு கிலோ கோதுமையும், ரூ.3-க்கு கிலோ அரிசியும் வழங்க ரூ.922 கோடி மானியமாக வழங்கப்படுகிறது.

*மாநிலத்தில் உள்ள 20 லட்சம் ஆட்டோ ரிக்‌ஷா டிரைவர்களின் நலனுக்காக மாநில அரசு சார்பில் ஆட்டோ ரிக்‌ஷா வெல்பர் அசோஷியேசன் நிறுவப்படும்.

*வேளாண்மை திட்டங்கள், விதைகள், உரங்கள் பற்றிய விவரங்களை விவசாயிகள் அறிந்து கொள்வதற்காக இலவச ஹெல்ப்லைன் (டோல்-பிரி) ஏற்படுத்தப்படும்.

*மத்திய அரசின் பாரத் நெட் திட்டத்தில் 13 ஆயிரம் கிராம பஞ்சாயத்துகள் இணைக்கப்படும்.

*ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையின் கீழ் மராட்டியத்தில் புதிதாக 5 லட்சத்து 32 ஆயிரம் வரி செலுத்துவோர் பதிவு செய்யப்பட்டு உள்ளனர். இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டு உள்ளது.

Next Story