திருச்செந்தூரில் லாரி மோதி மாமியார்-மருமகள் பலி வயலுக்கு நடந்து சென்றபோது பரிதாபம்

திருச்செந்தூரில் வயலுக்கு நடந்து சென்றபோது லாரி மோதி மாமியார்-மருமகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருச்செந்தூர்,
திருச்செந்தூரில் வயலுக்கு நடந்து சென்றபோது லாரி மோதி மாமியார்-மருமகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
வயலுக்கு சென்ற பெண்கள்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முத்துமாலை அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் செல்லையா, விவசாயி. இவருடைய மனைவி சுடலி (வயது 50). இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். நேற்று மாலையில் சுடலி தன்னுடைய மாமியாரான சித்திரைவடிவுடன் (72) திருச்செந்தூர்- குலசேகரன்பட்டினம் ரோட்டில் உள்ள வயல் வேலைக்கு புறப்பட்டு சென்றார்.
இவர்கள் 2 பேரும் திருச்செந்தூர்- குலசேகரன்பட்டினம் ரோடு இசக்கி அம்மன் கோவில் அருகில் நடந்து சென்றபோது, பின்னால் ஒரு லாரி வேகமாக வந்தது. டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி எதிர்பாராதவிதமாக சுடலி, சித்திரைவடிவு ஆகியோர் மீதும் பயங்கரமாக மோதியது.
2 பேர் பலி
இதில் சாலையில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த சுடலி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த சித்திரைவடிவு உயிருக்கு போராடியவாறு கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும், திருச்செந்தூர் கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷீஜாராணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
படுகாயம் அடைந்த சித்திரைவடிவை அவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தில் இறந்த சுடலியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
லாரி டிரைவர் கைது
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவரான திண்டுக்கல்லைச் சேர்ந்த பிரான்சிஸ் சேவியரை (45) கைது செய்தனர். திசையன்விளையில் இருந்து எம்-சாண்ட் மணலை ஏற்றிச் சென்ற இந்த லாரி, தூத்துக்குடியில் மணலை இறக்கி விட்டு, பின்னர் திசையன்விளைக்கு திரும்பி சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
திருச்செந்தூரில் லாரி மோதி மாமியார்- மருமகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story