பெரம்பலூரில் பயனாளிகளுக்கு இலவச கியாஸ் இணைப்பு வழங்கும் நிகழ்ச்சி


பெரம்பலூரில் பயனாளிகளுக்கு இலவச கியாஸ் இணைப்பு வழங்கும் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 23 April 2018 4:15 AM IST (Updated: 23 April 2018 2:05 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் மாவட்டத்தில் பயனாளிகளுக்கு இலவச கியாஸ் இணைப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில், புகையில்லா கிராமங்கள் உருவாக்கும் வகையில் மத்திய அரசின் பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் இலவச கியாஸ் இணைப்புகள் வழங்கும் நிகழ்ச்சி எசனை மற்றும் நொச்சியம் ஊராட்சிகளில் நடந்தது.

எசனையில் நடந்த உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் இலவச கியாஸ் இணைப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமை தாங்கி பயனாளிகளுக்கு இலவச கியாஸ் அடுப்பு மற்றும் எரிவாயு சிலிண்டர் வழங்கி பேசுகையில், பொதுமக்கள் இத்திட்டத்தை முழுமையாக பயன்படுத்திக்கொண்டு தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும் என்று கூறினார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதர், மாவட்ட வழங்கல் அலுவலர் (பொறுப்பு) இருதயமேரி, இந்தியன் ஆயில் நிறுவன எரிவாயு விற்பனை பிரிவு முதுநிலை மேலாளர் ஜெய்சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

செயல்முறை விளக்கம்

இதேபோல் நொச்சியம் கிராமத்தில் நடந்த பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் இலவச கியாஸ் இணைப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னாள் ஊராட்சி தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். கியாஸ் வினியோகஸ்தர் கஜேந்திரன் வரவேற்றார். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் செந்தில்நாதன், மகளிர் சுய உதவிக்குழு தலைவி தங்கம் ஆகியோர் பேசினர்.

தொடர்ந்து பயனாளிகளுக்கு கியாஸ் அடுப்பு மற்றும் சிலிண்டர் வழங்கப்பட்டது. பின்னர் எரிவாயு அடுப்பு பயன்படுத்துதல், எரிவாயு பயன்படுத்தலால் ஏற்படும் நன்மைகள் போன்றவை குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மேலும் செயல்முறை விளக்கமும் அளிக்கப்பட்டது. இதில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவன எரிவாயு விற்பனை பிரிவு முதுநிலை மேலாளர் ஜெய்சங்கர் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் எம்.எம்.கேஸ் ஏஜென்சிஸ் மேலாளர் சசிகலா நன்றி கூறினார். 

Next Story