சேடபட்டி அருகே சோக சம்பவம்: கோவில் திருவிழாவில் மின்சாரம் தாக்கி 2 வாலிபர்கள் பலி


சேடபட்டி அருகே சோக சம்பவம்: கோவில் திருவிழாவில் மின்சாரம் தாக்கி 2 வாலிபர்கள் பலி
x
தினத்தந்தி 9 May 2018 5:15 AM IST (Updated: 9 May 2018 4:37 AM IST)
t-max-icont-min-icon

சேடபட்டி அருகே கோவில் திருவிழாவுக்கு வந்திருந்த 2 வாலிபர்கள் மின்சாரம் தாக்கி பரிதாபமாக பலியானார்கள்.

உசிலம்பட்டி,

மதுரை மாவட்டம், சேடபட்டி அருகே உள்ள அத்திப்பட்டியில் புதுமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்திரைத் திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி நேற்று முன்தினம் இரவு அத்திப்பட்டியை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் வந்து புது மாரியம்மனை வழிபட்டனர்.

இந்த திருவிழாவுக்கு டி.கல்லுப்பட்டி அருகே உள்ள ரெங்கபாளையத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி மகன் மதன்குமார் (வயது 23), நல்லதம்பி மகன் சங்கையா (22) ஆகியோரும் வந்திருந்தனர்.

அவர்கள் இயற்கை உபாதைக்காக ஒதுக்குப்புறமாக சென்றனர். அப்போது சாலை ஓரத்தில் ஒரு தனியார் தோட்டத்தின் இரும்புக்கம்பி வேலியை அவர்கள் இருவரும் பிடித்தனர்.

திருவிழாவிற்காக அமைக்கப்பட்டிருந்த மின் விளக்கு வயர்கள் அந்த வேலியின் வழியாக சென்றுள்ளன.

இதில் எதிர்பாராத விதமாக மின் வயர் கம்பி வேலியில் பட்டு மின்சாரம் பாய்ந்து மதன்குமாரும், சங்கையாவும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள்.

இது குறித்து சாப்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story