பட்டா வழங்காததை கண்டித்து மதுராந்தகம் தாசில்தார் அலுவலகம் முற்றுகை

பட்டா வழங்காததை கண்டித்து மதுராந்தகம் தாசில்தார் அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.
மதுராந்தகம்,
காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியம் சூரை நெல்வாய் இருளர் குடியிருப்பு, கம்சலாபுரம் மாரிபுத்தூர், காவாதூர் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள புறம்போக்கு நிலங்களில் வீடுகட்டி 60 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருக்க கூடியவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது.
இருப்பினும் அவர்களுக்கு பட்டா வழங்கப்படவில்லை. வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 9 கோரிக்கைகளை வலியுறுத்தி மதுராந்தகம் தாசில்தார் அலுவலகத்தை நேற்று காலை அந்த பகுதி மக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோரிக்கை மனு
தற்போது தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி நடைபெறும் நிலையில் இந்த முற்றுகை போராட்டம் நடந்தது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, தமிழ்நாடு நில உரிமை கூட்டமைப்பு, பெண்கள் இயற்கை விவசாய குழு கூட்டமைப்பு நிர்வாகிகள் ருக்மானந்தன், விஜயகுமார், வாசுதேவன், மாரியம்மாள், தேவி, தயாளன், அப்துல்குமார் கலையரசி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பின்னர் அவர்கள் ஜமாபந்தி அதிகாரியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
Related Tags :
Next Story