அரசு பஸ்-கார் நேருக்கு நேர் மோதல்; பெண் உள்பட 2 பேர் பலி 2 பேர் படுகாயம்


அரசு பஸ்-கார் நேருக்கு நேர் மோதல்; பெண் உள்பட 2 பேர் பலி 2 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 13 May 2018 11:00 PM GMT (Updated: 13 May 2018 8:21 PM GMT)

நமணசமுத்திரத்தில் அரசு பஸ், கார் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் பெண் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர். 2 பேர் படுகாயமடைந்தனர்.

நமணசமுத்திரம்,

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி பகுதியை சேர்ந்தவர் அப்துல்வாகித். இவர் திருச்சி பாலக்கரை பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று இரவு இவரது மகன்கள் ஜியாவுதீன் (28), தாலிப்அலீம் (30), மருமகள் பவுசியாபானு (30), பவுசியாபானுவின் மகன் முகமது அன்சர் (8) ஆகிய 4 பேரும் ஒரு காரில் திருச்சி பாலக்கரையில் இருந்து புதுக்கோட்டை வழியாக தொண்டிக்கு சென்று கொண்டிருந்தனர்.

புதுக்கோட்டை அருகே உள்ள நமணசமுத்திரம் போலீஸ் நிலையம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே ராமேசுவரத்தில் இருந்து திருச்சி நோக்கி வந்த அரசு பஸ்சும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் கார் அப்பளம்போல நொறுங்கியது. முன் பகுதி சேதமடைந்த அரசு பஸ் சாலையோர பள்ளத்தில் இறங்கியது. இதில் காரில் பயணம் செய்த ஜியாவுதீன், பவுசியாபானு ஆகிய 2 பேரும் காரின் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே இறந்தனர். தாலிப்அலீம், முகமது அன்சர் ஆகிய 2 பேரும் படுகாயமடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பொன்னமராவதி துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழ்மாறன், திருமயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் நமணசமுத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் படுகாய மடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காரின் இடிபாடுகளில் சிக்கி கொண்டதால் போலீசாரால் இறந்த 2 பேரின் உடல்களை மீட்க முடியவில்லை.

இதுகுறித்து போலீசார் புதுக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நிலைய அலுவலர் சாந்தா தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். அங்கு இடிபாடுகளில் சிக்கிய 2 பேரின் உடல்களை பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் மீட்டனர். பின்னர் 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து அரசு பஸ் டிரைவர் மானாமதுரை பழைய தபால் நிலைய தெருவை சேர்ந்த சண்முகராஜா (44) மீது நமணசமுத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பஸ்சில் வந்த அனைத்து பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். பஸ்சின் முன்பகுதி மட்டும் சேதமடைந்தது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் அரைமணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story