நடத்தையில் சந்தேகம்: மனைவியின் கழுத்தை அறுத்த தொழிலாளி தானும் வி‌ஷம் குடித்து தற்கொலை


நடத்தையில் சந்தேகம்: மனைவியின் கழுத்தை அறுத்த தொழிலாளி தானும் வி‌ஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 14 May 2018 10:45 PM GMT (Updated: 14 May 2018 10:00 PM GMT)

கடலூர் முதுநகரில் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியின் கழுத்தை அறுத்த தொழிலாளி, தானும் வி‌ஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர் முதுநகர்,

கடலூர் முதுநகர் சுத்துக்குளம் பெரியார்நகரை சேர்ந்தவர் பெரியசாமி மகன் வேல்முருகன் (வயது 36). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி மாலதி (32). இவர்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

இந்த நிலையில் வேல்முருகன் வேலைக்கு செல்லாமல் மது குடித்து விட்டு அடிக்கடி மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் மனைவியின் நடத்தையிலும் சந்தேகப்பட்டதாக தெரிகிறது. இதனால் கணவன், மனைவிக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இது தொடர்பாக மாலதி மகளிர் போலீசில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து 2 பேரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று மாலதி வீட்டில் இருந்த போது, அங்கு கத்தியுடன் வந்த வேல்முருகன் அவரின் நடத்தையில் சந்தேகப்பட்டு தகராறு செய்தார். பின்னர் கத்தியை எடுத்து மாலதி கழுத்தை அறுத்து விட்டார்.

பின்னர் போலீசில் சிக்கிக்கொள்வோம் என்று நினைத்த அவர் மதுவில் வி‌ஷம் கலந்து குடித்து விட்டார். இதை பார்த்த அக்கம், பக்கத்தினர் அவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்கள் 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது பற்றி மாலதி கடலூர் முதுநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்றதாக வேல்முருகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story