கிருஷ்ணா நதி கால்வாய் சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை


கிருஷ்ணா நதி கால்வாய் சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 11 Jun 2018 12:07 AM GMT (Updated: 11 Jun 2018 12:07 AM GMT)

குண்டும் குழியுமான கிருஷ்ணா நதி கால்வாய் சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஊத்துக்கோட்டை,

சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்ற தமிழக, ஆந்திர அரசுகள் 1983-ம் ஆண்டு கிருஷ்ணா நதி நீர் பங்கீட்டு திட்டத்தை தீட்டின. இந்த திட்டத்தின்படி ஆந்திர அரசு ஆண்டு தோறும் 12 டி.எம்.சி. தண்ணீரை கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு திறந்து விட வேண்டும்.

ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை 4 டி.எம்.சி. தண்ணீர், ஜூலை மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை 8 டி.எம்.சி. தண்ணீர் என்று மொத்தம் 12 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்.

இதற்காக கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரி வரை 177 கிலோமீட்டர் தூரத்துக்கு கால்வாய் அமைக்கப்பட்டது. ஆந்திராவில் 152 கிலோமீட்டர் தூரத்துக்கும், தமிழகத்தில் 25 கிலோமீட்டர் தூரம் வரை கால்வாய் உள்ளது.

177 கிலோமீட்டர் தூரம் கால்வாய் நெடுகிலும் இரு மாநில கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்ட அதிகாரிகள், பொதுமக்கள் வந்து செல்வதற்காக கிருஷ்ணா நதி கால்வாய் கரையில் சாலை அமைக்கப்பட்டது. அவ்வப்போது பெய்து வரும் பலத்த மழை காரணமாக சாலை குண்டும், குழியுமாக மாறி உள்ளது.

குறிப்பாக தமிழக எல்லையில் ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்ட் முதல் பூண்டி ஏரி வரை 25 கிலோமீட்டர் தூரத்துக்கு சாலை மிக மோசமாக சேதம் அடைந்துள்ளது. அரசு உடனடியாக குண்டும், குழியுமாக மாறிஉள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story