பாலமலை வனப்பகுதியில் சிறுத்தைப்புலிகள் நடமாட்டம் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை

பாலமலை வனப்பகுதியில் சிறுத்தைப்புலிகள் நடமாட்டம் உள்ளதால், முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இடிகரை,
கோவை வனக்கோட்டத்தில் 7 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு 2018–ம் ஆண்டிற்கான புலிகள் கணக்கெடுப்பு பணி கடந்த 9–ந் தேதி முதல் 11–ந் தேதி வரை நடைபெற்றது. இதில் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்துக்கு உட்பட்ட பாலமலை வனப்பகுதி, நாயக்கன்பாளையம், தோலம்பாளையம், ஆனைக்கட்டி, கோபனாரி உள்ளிட்ட அடர்ந்த வனப்பகுதி, நீர்நிலைகளில் வனத்துறையினர் புலிகள் நடமாட்டம் குறித்து ஆய்வு செய்தனர். இதில் பாலமலை வனப்பகுதியில் பல்வேறு இடங்களில் சிறுத்தைப்புலிகளின் கால்தடம் பதிந்து இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் மான்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதனால் சிறுத்தைப்புலிகள் உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் புலி இருப்பதற்கான கால்தடம் எதுவும் கண்டறியப்படவில்லை. மேலும் கரடி, காட்டெருமைகள், காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் இருப்பது அதன் கால்தடங்கள், கழிவு எச்சங்கள் மூலம் தெரியவந்துள்ளது என்றனர்.
இதுகுறித்து பாலமலை மற்றும் நாயக்கன்பாளையம் பகுதிகளில் உள்ள விவசாயிகள் கூறும்போது, நாங்கள் பல தலைமுறைகளாக விவசாயம் செய்து வருகிறோம். இந்த பகுதியில் பல வருடங்களாக காட்டுயானைகளின் நடமாட்டம் உள்ளது. தொடர்ந்து மனித–வனவிலங்கு மோதல் ஏற்படுகிறது. இதனால் விவசாயம் செய்ய முடியாமல் எங்களில் பலர் மற்ற வேலைகளுக்கு சென்று விட்டனர். தற்போது யானைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த பாலமலை பகுதியில் வனத்துறையினர் அகழி வெட்டியுள்ளனர். இந்த நிலையில் தற்போது சிறுத்தைப்புலிகள் நடமாட்டம் எங்களுக்கு மிகவும் வேதனை அளித்துள்ளது. நாங்கள் விவசாயம் மட்டுமின்றி ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறோம். சிறுத்தைப்புலிகள் இருந்தால் ஆடு, மாடுகளை வளர்க்க முடியாது. இதற்கு வனத்துறையினர் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.