சாதாரண குற்றவாளியை கூட போலீசாரால் கைது செய்ய முடியவில்லை: போலி ஏ.டி.எம். கார்டு மோசடி வழக்கினை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும்


சாதாரண குற்றவாளியை கூட போலீசாரால் கைது செய்ய முடியவில்லை: போலி ஏ.டி.எம். கார்டு மோசடி வழக்கினை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும்
x
தினத்தந்தி 26 Jun 2018 5:00 AM IST (Updated: 26 Jun 2018 1:56 AM IST)
t-max-icont-min-icon

சாதாரண குற்றவாளியைக்கூட புதுவை போலீசாரால் கைது செய்ய முடியாத நிலை இருப்பதால் போலி ஏ.டி.எம். கார்டு மோசடி வழக்கினை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றவேண்டும் என்று பாரதீய ஜனதா வலியுறுத்தி உள்ளது.

புதுச்சேரி,

புதுவை மாநில பா.ஜ.க. தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. நேற்று நிருபர் களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுவை மாநிலத்தில் பஸ் கட்டணம் 50 சதவீதம் அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஏழை, நடுத்தர மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கட்டண உயர்வினை அரசு உடனடியாக ரத்துசெய்ய வேண்டும்.

போலி ஏ.டி.எம். கார்டு மோசடியில் சர்வதேச கும்பலுக்கு தொடர்பு உள்ளது. புதுவை காவல்துறையின் செயல்பாடு மோசமாக உள்ளது. கேரள மாநிலத்தில் குற்றவாளியை கைது செய்ய சென்ற போலீசார் அடிவாங்கி வந்துள்ளனர். அவர்களது துப்பாக்கி எங்கே போனது? ஒரு சாதாரண மோசடியில் தொடர்புடையவரைக்கூட போலீசாரால் கைது செய்து அழைத்துவர முடியவில்லை. அப்படி இருக்க சர்வதேச கும்பலை இவர்கள் எப்படி கைது செய்வார்கள்?

இந்த விஷயத்தில் கவர்னர் தலையிட வேண்டும். ஆளுங்கட்சி பிரமுகர்களின் தொடர்பு இருப்பதால் முதல்-அமைச்சர் நாராயணசாமி சி.பி.ஐ. விசாரணையை மறுக்கிறார். எனவே போலி ஏ.டி.எம். கார்டு மோசடி குறித்து சி.பி.ஐ. விசாரிக்க கவர்னர் உத்தரவிட வேண்டும்

காலாப்பட்டு பகுதியில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலான நிலத்தடி நீரை அதிக அளவில் உபயோகப்படுத்தும் 2 ரசாயன தொழிற்சாலைகள் உள்ளன. அங்கு சோதனை நடத்தி அவற்றை மூட கவர்னர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

புதுவையில் 50 மைக்ரானுக்கு குறைவான தடிமனுள்ள பிளாஸ்டிக் பைகளின் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க சுற்றுச்சூழல் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதை கண்டித்து சுற்றுச்சூழல் துறை அலுவலகத்துக்கு பூட்டுபோடும் போராட்டம் நடத்த உள்ளோம்.

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயாராக வசதியாக 412 பயிற்சி மையங்கள் உள்ளன. அதேபோல் புதுவையிலும் பயிற்சி மையங்களை தொடங்கவேண்டும். புதுவையில் பஸ் கட்டணம் மட்டுமல்லாது வீட்டுவரி, மின்சார கட்டணம் என அனைத்தும் உயர்ந்துவிட்டது. பட்ஜெட்டிற்கு மத்திய அரசு எப்போதும் இல்லாத அளவுக்கு ரூ.7 ஆயிரத்து 530 கோடிக்கு அனுமதி அளித்துள்ளது. எனவே உயர்த்தப்பட்ட வரிகளை உடனடியாக ரத்து செய்யவேண்டும்.

மத்திய அரசு அனுமதி தராததால் பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியவில்லை என்று புதுவை ஆட்சியாளர்கள் மத்திய அரசை குற்றஞ்சாட்டினார்கள். ஆனால் இப்போது மத்திய அரசு அனுமதி கொடுத்த நிலையில் சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் உள்ளிட்டோர் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளதால் பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

புதுவையில் ஆளுங்கட்சியினருக்கு மட்டும் பட்டா மாற்றம் உடனடியாக நடக்கிறது. குயில்தோப்பு போன்ற சர்ச்சைக்குரிய இடங்களுக்கான பத்திரப்பதிவும் நடக்கிறது.

இவ்வாறு சாமிநாதன் எம்.எல்.ஏ. கூறினார்.

Next Story